தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஊராட்சித் தலைவர் சேவியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருக்கானூர் பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். விபத்துகள் நடக்காமல் தடுக்க பள்ளி அருகே வேகத்தடை மற்றும் வேக கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்புகள் உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய கவுன்சிலர் அருளானந்தசாமி, ஊராட்சி துணைத் தலைவர் ரோஜா மேரி, ஊராட்சி செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.

மகளிர் திட்ட உதவி அலுவலர் சண்முக பாண்டியன், மாவட்ட கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ், ஊராட்சி துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளியை மேம்படுத்தல், ஊராட்சி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் குருவாடிப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் தாமரை செல்வி பன்னீர்செல்வம், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துறையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வன், ஊராட்சி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






தஞ்சை நீலகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வல்லமை பாஸ்கரன் தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் சரவணன் ஊராட்சி செயலாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பொறுப்பாளர் வே. ரெங்கசாமி ஆகியோர், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கிராம சபைக் கூட்டம் நடத்தும் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

"கொன்றைக்காடு ஆற்றுப்பாலத்தில் இருந்து திருப்பூரணிக்காடு பாலம் செல்லும் பழுதடைந்துள்ள தார்ச் சாலை, கொன்றைக்காடு கடைவீதியில் இருந்து கிராம குடியிருப்பு வழியாக செல்லும் தார்ச் சாலை,   கொன்றைக்காட்டிலிருந்து ஆனைக்காடு செல்லும் சாலையில் இருந்து முத்தரையர் சுடுகாடு வரை செல்லும் சாலையை முழுமையாக செப்பனிட்டு தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும்.  

சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். கொன்றைக்காடு வடக்குப் பகுதி கொல்லர் தச்சர், மருத்துவர், சலவைத் தொழிலாளர்களின் சுடுகாடு - இடுகாட்டை சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

கொன்றைக்காடு வடக்கு பகுதி, பட்டுக்கோட்டை சாலையில் இருந்து ஆசாரி தெரு செல்லும் சாலையை சர்வே செய்து, சாலையை செப்பனிட்டு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும். கொன்றைக்காடு உயர்நிலைப்பள்ளி பின்பகுதி சாலை, ரயில்வே பாலம் முதல் முத்தரையர் சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.