தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாஸ்ட் புட் கடைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தரமான உணவு பயன்படுத்தப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். தஞ்சையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


தஞ்சை ஆபிரகாரம் பண்டிதர் தெரு, கீழராஜவீதி, கரந்தை, தென்கீழ் அலங்கம், பஸ்ஸ்டாண்ட் பகுதி, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனையை நடத்தினர். இந்த சோதனையின் போது கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி, அதிக கலர் பொடி தடவி வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது, கெட்டுபோன நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர்.


இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா கூறுகையில், தஞ்சையில் 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு கெட்டுப்போன கோழி இறைச்சிகள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்நாளே தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 




மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது மீண்டும் தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை எடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய உணவகங்கள் மற்றும் இரவு நேரங்களில் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் புட் கடைகள் என அனைத்து உணவுகளிலும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய், கறியின் தன்மை மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் கெட்டுப்போன கறிகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.


மேலும் மறுமுறையும் அவ்வாறு செய்தால் கடையின் லைசென்ஸ் ரத்து செய்வதோடு கடைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும். சவர்மா, தந்தூரி கிரில் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மேலும் இவற்றை இரவு நேரத்தில் சாலையோரங்களில் சுகாதாரமற்ற முறையில் சமைத்து தருகின்றனர். இதனால் வாலிபர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.