மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை எதிர்ப்பு மற்றும் சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்களிடையே பிரச்சனை நீண்டகாலமாக உள்ளது.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி கிராம மீனவர்கள் தடையை மீறி சுருக்குமடி வலையுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனை அறிந்த தரங்கம்பாடி தலைமையிலான சுருக்குமடி வலை எதிர்ப்பு மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் சென்று அவர்களை மறிக்க முயன்றனர். இந்தப் பிரச்சனையின் போது போது திருமுல்லைவாசல் விசைபடகு வானகிரி பைபர் படகு மீது மோதி பைபர் படகு முழுவதும் சேதமடைந்தது. மேலும் படகில் இருந்த 3 மீனவர்கள் காயமடைந்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 




இதனால் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் வானகிரிக்கு அருகில்  நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த நான்கு பைபர் படகுகளுக்கு  தீ வைத்து கொளுத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான  மீனவ கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பைபர் படகை மோதி மீனவர்களை காயப்படுத்திய விசைபடகை பறிமுதல் செய்ய வேண்டும், காயமடைந்த மீனவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும், அரசால் தடைசெய்யப்பட்ட வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட விசைப்படகுகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி வரை தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, நடவடிக்கை எடுக்கப்பாடாத பட்சத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்பது அடங்கிய மனுவை அளித்து தொழில் மறியலில் ஈடுபட்டு வந்தனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தொடர்ந்து பைபர் படகை மோதிய விசைப்படகு மற்றும் சுருக்கு மடி வலையை போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான மீனவப் பஞ்சாயத்தார்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்தனர். அப்போது  அரசால் தடை செய்யப்பட்ட வலையை கொண்டு மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்றும், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிக்க மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தினார்.  




இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் இன்று காலை முதல் தொழில் செய்ய கடலுக்கு செல்வதாக கூறினர். இதன் மூலம் கடந்த எட்டு நாட்களுக்கு பின்னர் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.