தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்ததை அடுத்து தடை காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னலை சந்தித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீன்பிடிப்பில்  ஈடுபட்டனர். ஆனால் மீன் பிடி தடை காலம் முடிந்த பின்னர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை இதனால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் விஜய்.  இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் மடவாமேடு கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் நாராயணமூர்த்தி என்பவர் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து  நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு அதே படகில் ஏற்றி அவசர அவசரமாக மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 




இதனையடுத்து தகவலறிந்த கடலோர காவல்துறை காவலர்கள் மடவாமேடு கடல்கரைக்கு விரைந்து வந்து நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர் நாராயண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடவாமேடு மீனவ கிராமம் மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




புயல்,வெள்ளம்,மழை என இயற்கை சீற்றம் எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் ஆகவே இருக்கின்றன. ஆண்டில் பாதி நாட்கள் புயல் வெள்ளம் மழை என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அரசு விதிக்கும் மீன்பிடி தடை காலம் காரணமாக இரண்டு மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் மீனவர்களுக்கு, இயற்கை சாதகமாக உள்ள காலகட்டத்தில் மட்டுமே தங்கள் உயிரை துச்சமென நினைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படகில் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம் போன்ற எதிர்பாராத காரணங்களால் படகுகள் விபத்துக்குள்ளாகும் படகிலிருந்து நிலைதடுமாறி மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதுபோன்று உயிரிழப்பு ஏற்படும் மீனவரின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.