மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நான்கு தாலுக்காகளில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1.68 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையாலும், அதனை தொடர்ந்து ஆண்டின் இறுதியில் பெய்த அதீத கனமழையால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது.




மழை நீரில் மூழ்கிய பயிர்கள் சில இடங்களில் முளைக்கத் தொடங்கியது. இதனையடுத்து தண்ணீர் வடிந்தவுடன் விவசாயிகள் எஞ்சிய பயிர்களை அறுவடை செய்யும் பணியைத் துவங்கினர். மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம், சீர்காழி,  மணல்மேடு, காளி, திருமங்கலம், ஆனதாண்டவபுரம், ஆகிய பகுதிகளில் முழுவதுமாகவே சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 




சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக தனது 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது


இந்த சூழலில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.  ஆனால்  இந்த ஆண்டு தற்போது வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெற்பயிர்களை வீடுகளிலேயே பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.




மேலும் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் துவங்கும் காலங்களில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 155 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதே வழக்கம். இந்த ஆண்டு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு பணியாளர்கள் தேர்வு இதுவரை நடைபெறாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை





எனவே விரைவாக பணியாளர்களை தேர்வு செய்து மாவட்டத்தில் 4  தாலுகாவிலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும் இல்லையெனில் மழையால் விவசாயத்தை தாங்கள் விளைவித்த நெல்களை வெளிச்சந்தையில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு மிகுந்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும், இதனை அரசு கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.