சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர் வாரினால் மட்டுமே சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியும் விவசாயிகள் வேண்டுகோள்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என மூன்று போகம் சாகுபடி செய்து வந்தனர். குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை நம்பி 70 சதவிகித விவசாயமும், ஆழ்துளை கிணறுகளை நம்பி 30 சதவிகித விவசாயப் பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை மற்றும் தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளாமல், ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒருசில தினங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.



திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கான முதல் கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தங்களது வயல்களை டிராக்டர் மூலம் உழவு அடித்து வயல்களை பதப்படுத்துகின்றனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆகையால் டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு முழுமையான தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை மட்டும் தூர்வாரி உள்ள நிலையில் ஆறுகளில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள், மற்றும் பி பிரிவு, சி பிரிவு, டி பிரிவு, உள்ளிட்ட வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தினால் கிராமப்புறங்களுக்கு தண்ணீர் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் சிறு குறு வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ந்தால் தான் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்த முடியும். ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்கக்கூடிய காலங்களில் உடனடியாக இயந்திரங்களை பயன்படுத்தி சிறு குறு வாய்க்கால்களை மாவட்டம் முழுவதும் உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வைத்துள்ளனர். அதேபோன்று வேளாண்மை விரிவாக்க மையங்களில் தரமான விதைகளை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு எந்தெந்த விதைகளை தெளித்தால் இயற்கை இடர்பாடுகளை சமாளித்து சாகுபடி பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை விவசாயிகள் வைத்துள்ளனர். 



மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு சில பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கிடங்குகளில் யூரியா தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் தொடக்க வேளாண்மை சங்கத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு தேவையான உரம், யூரியா ஆகியவை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா, உரம் தட்டுப்பாட்டை காரணம் காட்டி தனியார் கடைகளில் அதிக விலைக்கு யூரியா உரத்தை விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் வேளாண்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு யூரியா, உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.