தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாத்திகளில் உப்புகள் கரைந்து வீணாகும் நிலை உள்ளது என்று உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் மிக முக்கிய தொழிலாக உள்ளது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ரசாயன உப்பு, உணவு உப்பு என 2 விதமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


கடந்த ஜனவரி மாதத்தில் பாத்தி சீரமைத்தல், வரப்பு அமைத்தல். கடல் வாய்க்கால் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்தன. இதையடுத்து மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யும் உணவு உப்பு மற்றும் ரசாயன உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உப்பு ஆலைகளில் மேன்மைப்படுத்தப்பட்டு அங்கிருந்து பிற தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.




இந்த ரசாயன உப்பு உரம் தயாரிக்கவும். சோப்பு, சோடா, பானம், வீடு சுத்தம் செய்யும் ஆசிட் தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் விட்டுவிட்டு பெய்த கோடை மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


இதனால் வாரப்பட்ட உப்புகள் பாத்திகளில் மழைநீரில் கரைந்து வீணாகி வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.


தற்போது 500 ஏக்கருக்கு குறைந்த அளவு பரப்பில் பகுதிகளில் மட்டுமே உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் தரப்பில் கூறியதாவது:


உப்பள பாத்திகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. மழையால் பாத்திகளில் உற்பத்தியான உப்புகள் கரைந்து வீணாகி போகிறது. மேலும் பாத்திகளில் இருந்து பிரித்தெடுத்து லாரியில் ஏற்றி அனுப்புவதற்காக குவித்து வைத்த உப்பும் மழை நீரில் கரைந்து வீணாகிறது.


இந்த மழையால் உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் உப்பளத் தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளூர் உப்பளத் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டதால் குறைந்த அளவே உப்பளத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உப்பளத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்திற்கு அனுப்பப்படும் உப்புகள் அனுப்புவதிலும் தடை ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.