தஞ்சாவூர்: தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் குற்றம் சாட்டி பேசினார்.


தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சாரபில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். 


ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், ரத்தினசமி, ராமநாதன், தவமணி, ராமச்சந்திரன், இளமதிசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு..க அமைப்பு செயலாளருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:


தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மீறி மின்கட்டணத்தை உயர்த்தினர். அதேபோல் பால் விலையை உயர்த்தினர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தெரிவித்தனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். இதை எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.


அ.தி.மு.க. ஆட்சியில் பால் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.


தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது. 11 மருத்துவக்கல்லூரி, 6 சட்டக்கல்லூரி, 25-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன.


காவிரி பிரச்சினையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி நமது உரிமையை நிலைநாட்டினார். எடப்பாடி பழனிசாமி, காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


இதில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், சாமிவேல், கலியமூர்த்தி, இளங்கோவன், சூரியநாராயணன், சோழபுரம் அறிவழகன், அசோக்குமார், மதியழகன், மலை.முருகேசன், முருகானந்தம், துரைமாணிக்கம், அருணாசலம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.


மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.