ஆமை குஞ்சுகளை தன் மகளுடன் கடலில் விட்டு மகிழ்ந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்
அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் தன்மகளுடன் கடலில் மகிழ்ந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் இந்த பொறிப்பகத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.

Just In
இந்நிலையில் குஞ்சு பொறித்த ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது குழந்தையுடன் கலந்து கொண்டார், மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வன காப்பாளர் ஜோசப் டேனியல், உடையார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அங்குதன் உள்ளிட்டோர் பங்கேற்று 2200 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.
ஆலிவர் ரெட்லி ஆமை வகைகள் பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும் அரியவகை இனமாக கணக்கிடப்படுகிறது. இவ்வகை ஆமையானது ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து, ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.
இதில் இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையார் முதல் தரங்கம்பாடி வரை கடல் பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இட்ட சுமார் 32,000 முட்டைகளை சேகரித்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று 2200 குஞ்சுகள் முட்டையில் இருந்து பொறித்து வெளிவந்தது, அவ்வாறு வெளிவந்த அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் இணைந்து கடலில் விட்டு மகிழ்ந்தனர்.
இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இன்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற் பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தார். உடன் சீர்காழி வனத்துறையினர், காவல் துறையினர், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.