தஞ்சாவூர்: வீழ்வதற்கு நான் என்ன சாதாரண ஆளா. உங்களால் முடிந்தவரை எந்த பக்கம் வேண்டுமானாலும் கவிழ்த்து பாருங்கள். நான் நிமிர்ந்து நிற்பேன் என்று கம்பீரமாக தஞ்சையின் பெருமையை உயர்த்தி பிடிக்கிறது தலையாட்டி பொம்மைகள்.


தஞ்சாவூர் பெருமை பட்டியலில் முக்கிய இடம்


தஞ்சாவூரின் பெருமைகளை பட்டியல் போட முடியுங்களா. நீண்டுக்கிட்டே போகும். இதில் உலகளவில் புகழ் பெற்றவை என்றால் அது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்தான். என்ன அழகு எத்தனை அழகு என்று கலை நயமிக்க இந்த பொம்மைகள் கண்ணையும், மனதையும் கவர்பவை. எப்படி சாய்த்து விட்டாலும் நான் கவிழ்ந்து விழ மாட்டேன் என்று சட்டென்று நிமிர்ந்து விடும்.


பாரம்பரியத்தை விளக்கும் பொம்மைகள்


தலையாட்டி பொம்மைகளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று செட்டியார் உருவம். அவரது மனைவி உருவம். நாட்டிய பெண் உருவம். ராஜா உருவம் என்று இருக்கும். இந்த பொம்மைகளை தட்டினால் தலை ஆடும். நாட்டிய பெண் உருவம் தலை, உடல் என ஆடும். நளினமாக கலை நுட்பத்துடன் பாரம்பரியத்தை கொண்ட இந்த பொம்மைகளுக்கு இருக்கும் சிறப்பு நம்மவர்களுக்கு கிடைத்த பெரிய பெருமை. இதை டான்சிங் டால் என்பார்கள்.


இந்த பொம்மைகளை களிமண் கொண்டு செய்கின்றனர். உருவங்களுக்கு பேப்பர் கூழ் பயன்படுத்துக்கின்றனர். வர்ணம் பூசப்படுவதும் ரசாயனம் அற்ற இயற்கை வர்ணங்கள்தான். இந்த பொம்மைகள் வெளிநாடுகளிலும் மிகவும் பிரசித்தம். இன்றும் இவை பல வெளிநாடுகளுக்கு பறக்கின்றன. விரும்பி வாங்கி பரிசாக கொடுக்கும் வெளிநாட்டினர் ஏராளம் பேர்.


நாட்டியமாடும் மங்கை உருவம் கண்ணை கவரும். அப்படியே செட்டியாரும், அவரது மனைவியும் அமர்ந்தது போல் உள்ள பொம்மை சிரிப்பை வரவழைக்கும். இப்படி நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்தது. அடுத்ததுதான் இன்னும் பிரசித்தி பெற்றது. எந்த பக்கம் சாய்த்தாலும் நிமிரும் மண் பொம்மை தாங்க. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.


வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விரும்பி வாங்குகின்றனர்


எலக்ட்ரானிக் விளையாட்டு பொருட்கள் எத்தனை வந்தாலும் என்னை அடிச்சுக்கவே முடியாது என்று பெருமையில் கொடி கட்டிதான் பறக்கின்றன தஞ்சை தலையாட்டி பொம்மைகள். பழம் பெருமை வாய்ந்த இந்த சுடுமண் பொம்மைகளை தஞ்சைக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் உற்பத்தி செய்கின்றனர். இந்த மண்பொம்மைகளுக்கு அழகே அதன் நருவிசான கலைதான். அழகான வர்ணங்கள் பூசப்பட்டு நகைகள் அணிவிக்கப்பட்டது போன்ற கலையம்சம் கொண்ட இந்த பொம்மைகளின் அடிப்புறம் மட்டும் உருண்டையாக கனமாக இருக்கும். பொம்மைகளுக்கு இதுதான் அஸ்திவாரம் என்று சொல்லலாம். இந்த பொம்மைகளை கீழே சாய்த்து வைத்தால் ஸ்பிரிங் போல சட்டென்று நிமிர்ந்து ஆட தொடங்கும். சுற்றுப்புறம் மற்றும் குழந்தைகளை பாதிக்காத வகையில் இன்றும் இந்த பொம்மைகள் செய்யப்படுகின்றன.


சுடுமண்ணால் செய்யப்பட்டவை


தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றாலே அது சுடுமண்ணால் செய்யப்பட்டதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் இதன் அழகு குன்றாது. ஆனால் பிளாஸ்டிக்கில் குறைந்த விலைக்கு இந்த பொம்மைகள் வருகின்றன. அடியில் உள்ள பிளாஸ்டிக் வட்டத்தில் களிமண்ணை மட்டும் வைத்துவிடுவர். இதனால் இதுவும் எந்தபக்கம் சாய்த்தாலும் நிமிர்ந்து நின்று ஆட ஆரம்பித்து விடும். ஆனால் எப்போதும் பெருமை என்றால் சுடுமண்ணால் செய்யப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்குதான்.


இந்த பொம்மைகளை வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு வரும் சுற்றுலாபயணிகள் வாங்கி செல்கின்றனர். இந்த பொம்மைகள் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத தஞ்சையின் பெருமையை கூறுபவை