எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும். எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சங்க காலத்தில் பகையரசரை வென்ற அரசர் எக்காளம் இசைத்து மகிழ்வர் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாதஸ்வரத்தை போல முன்றரை அடி

  நீளமும், அடிப்பகுதி யானையின் கால்கள் அளவுக்கு விரிந்து இருக்கும் எக்காளம் ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் எக்காளம் என்ற பெயரிலும் மற்ற மாநிலங்கள் மற்றும் நேபாளம் முழுவதிலும் வேறு பெயர்களில் சில உருவ  வேறுபாடுகளுடன் பரவலாக புழக்கத்தில் உள்ளது. 



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் விற்பனை செய்யப்படும் எக்காளங்கள் தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ளது. நேபாளத்தில் பஞ்ச் பாஜெ என்ற அவர்களின் பாரம்பரிய ஐந்து இசைக்கருவிகளில் ஒன்றாக கர்னால் என்ற பெயரில் எக்காளம் திகழ்கிறது. ஹிமாசல பிரதேசத்தில் இக்கருவி தொங்க்ரு என்று அழைக்கப்படுகிறது.மன அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும்  அதிகரிக்கும். இந்த கருவி வாசிப்பவர்கள் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களிடம் மது, புகையிலை பழக்கமும் இருக்காது.



எக்காளம் இசையை கேட்பவர்களும், வாசிப்பவர்களும் பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மாணவர்களும் கல்வியில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு துணைபுரிவதாக கூறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. இறைபக்தியும், இசையும் இணைவதால் நோயின்றி நீண்ட நாட்கள் வாழ்வதற்கு, இந்த எக்காளம் இசை உறுதுணையாக இருக்கிறது.


தொட்டில் முதல் இடுகாடு வரை, பாடல்களால் நிறைந்தது தமிழர் வாழ்வு. இயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த இம்மக்கள், வாழும் நிலத்துக்கும் வளத்துக்கும் ஏற்ப இசையையும் இசைக்கருவிகளையும் உருவாக்கினார்கள். பல இசைக்கருவிகள், மக்களின் புழங்கு பொருட்களில் இருந்து பிறந்தவையே. அவ்விதம், நீண்ட கொம்புகளிலிருந்து பிறந்து, பிற்காலத்தில் பித்தளைக்கருவியாக உருமாறியது.


ஆலய வீதியுலா காலங்களில் நீண்ட குழாய் போன்ற வடிவத்தில் ’பொம்’  என இசை முகிழும் இக்கருவியைப் பார்த்திருக்கலாம். பெரும் தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்வுகளிலும், சுபகாரியங்களிலும் கௌரவத்தின் அடையாளமாக வாசிக்கப்பட்ட இக்கருவி இன்று புழக்கத்தில் இருந்து விலகி, அழிவின் விளிம்பில் நிற்கிறது. தஞ்சை மாவட்டம் சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் மட்டும் சிலர் இக்கருவியை வைத்து வாசிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இக்கருவி அவ்வப்போது இசைக்கப்படுகிறது.


நாதஸ்வரத்தை போல 4 மடங்கு நீளம். அடி அனசுப்பகுதி, யானையின் கால் அளவுக்கு விரிந்திருக்கிறது. உலவுத்தண்டில் துளைகள் இல்லை. திருச்சங்கத்தையும் நாதஸ்வரத்தையும் கலந்து இசைத்த ஒலி. தனித்துவம் பெற்ற இக்கருவியின் இசை மகிழ்வின் அடையாளம். தாமிரம் அல்லது பித்தளையால் செய்யப்பட்ட 4 குழாய்கள். பொருந்தும் அமைப்புள்ள அவற்றை இணைத்து நாதஸ்வரத்தைப் போல வாய்வைத்து ஊதுகிற ஊதுகருவியே எக்காளம். தாரை, தப்பட்டை, நமரி, எக்காளம், திருச்சின்னம் ஆகிய இசைக்கருவிகளை கிராமிய பஞ்ச வாத்தியங்கள் என்பார்கள். அக்காலத்தில் குடமுழுக்கு, தேரோட்டம், முக்கிய உற்சவங்களில் இக்கருவி மரியாதைச் சின்னமாக முன்னால் கொண்டு செல்லப்படும். எக்காளக்கூத்து என்ற பெயரில் இந்த இசைக்கருவியை இசைத்தபடி ஆடும் நாட்டுப்புறக் கலைவடிவம் ஒன்றும் உண்டு. மக்கள் வெளிநாட்டு இசைக்கு மயங்கி மாறியதால், பழங்காலத்து இசைகளின் மரபு மறைந்து போனது. இதனால் எக்காளக் கூத்தும் காணாமல் போய்விட்டது.


இது குறித்து சுந்தரபெருமாள் கோயிலை சேர்ந்த எக்காளம் வாசிக்கும் லெட்சுமணன் (60) கூறுகையில்,


எக்காளத்தை இசைப்பது மிகவும் சிரமம். காற்றை முழுமையாக உள்வாங்கி அடிவயிற்றில் இருந்து ஊதவேண்டும். எக்காளம் வாசித்தால் சுமார் 1 கிலோமீட்டர் துாரம் வரை கேட்கும், தொலைதூரத்துக்கு அதிர்வை ஏற்படுத்தும். இக்கருவியை வாசிக்க எந்த இலக்கண வரன்முறைகளும் இல்லை. செவிவழிப் பயிற்சியே. பெரும்பாலும் பரம்பரையாகவே கலைஞர்கள் உருவாகிறார்கள். தற்போது எங்கள் குடும்பத்திலுள்ள ஒரு சில வாரிசுகள் மட்டும் வாசித்து வருகின்றோம். கும்பகோணம் பகுதியில் உள்ள பிரதான கோயிலான சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் கிராமங்களில் சிறுதெய்வ வழிபாடுகளில் எப்போதாவது வாசிப்பதற்காக அழைத்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்து கூப்பிடுவாங்க. கோவில், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் வரும். இப்ப யாரும் சீண்டுறதில்லே. இதை மட்டுமே வச்சுக்கிட்டு செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பாதிப்பால் கோயில் விழாக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காததால் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமத்தில் இருந்து வருகின்றோம். அதனால் குடும்ப வறுமையை போக்க கிடைக்கும் வேலையை செய்து வருகின்றோம். சில ஆண்டுகளுக்கு முன், கோவிலில் இக்கலைஞர்களின் எக்காள இசை வாசிப்பைப் பார்த்த, சுற்றுலா வந்த நான்கு சிங்கப்பூர் இளைஞர்கள், அக்கருவியின் வடிவத்திலும் வாசிப்பிலும் மயங்கிப் போனார்கள். ஆர்வம் ஏற்பட்ட இந்த இளைஞர்கள், சுந்தரப்பெருமாள் கோவிலுக்கே வந்து தங்கியிருந்து, எக்காளம் வாசிக்க பயிற்சியும் பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதே போல் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி முருகன் கோயிலில் சூரசம்காரத்தின் போது, எக்காளம் வாசிப்பது முக்கியமானதாகும். அப்போது எக்காளம் வாசித்த பிறகு தான் சுவாமி, சூரனை வதம் செய்ய புறப்பட்டு செல்வார். அப்பழக்கம் இன்றளவு உள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற காலம் காலம் தொட்டு பர்மபரையாக வாசிக்கின்ற எக்காள இசை வாசிப்பவர்களை, தமிழக அரசும், தமிழ்நாட்டில் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும். எனவே, அழிவின் விழிம்பில் உள்ள எக்காளம் இசை, மீண்டும் புத்துயிர் உண்டாக்க, தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், எக்காள வாசிப்பவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும், மூத்த இசை வாசிப்பவர்களுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும், எங்களது வாரிசுகளை அனைத்து கோயில்களிலும் வாசிப்பதற்கு அரசு ஆணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.