தஞ்சாவூர் அருகே முறைகேடான காதல் கொலை வரையில் சென்று விட்டது. திருமணம் ஆகி மனைவி இருக்கும் போது மற்றொரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள அவர் வற்புறுத்தியதால் கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்ற தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் அகல்யா (26). தஞ்சையில் உள்ள தனியார் கல்லுாரி பி.எஸ்.பி., படிப்பை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முடித்தார். பின்னர் அரசு பணி தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும் மேலஉளூரில் இருந்து தனியார் பஸ்சில் வந்து சென்றார்.


வழக்கம் போல் கடந்த 6ம் தேதி தஞ்சைக்கு வந்த அகல்யா மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை வடசேரி பாசன வாய்க்காலில் ஒரு இளம்பெண் உடல் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான அகல்யா என்பது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் அகல்யாவின் செல்போன் எண்ணை வைத்து, அவருக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்தனர். இதில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25)  என்பவர், அகல்யாவை கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று நாகராஜை பிடித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இதில்  நாகராஜ் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை  தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு வரும் அகல்யாவுடன் கடந்த மூன்று மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


மேலும், அடிக்கடி இருவரும் வெளியில் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நாகராஜ் திருமணமானவர் என அகல்யாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அகல்யா, நாகராஜ் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளக் கூறி அகல்யா வற்புறுத்தியுள்ளார்.


இந்நிலையில்தான் கடந்த 6ம் தேதி அகல்யாவை, நாகராஜ் காரில் அழைத்து சென்றுள்ளார். காரில் செல்லும் போதே இருவருக்கும் மீண்டும் திருமணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அகல்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து நாகராஜ் கொலை செய்துள்ளார். பின்னர் அன்றிரவு அகல்யாவின் உடலை வடசேரி பாசன வாய்க்காலில் வீசி தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் நாகராஜிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான நாகராஜிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முறைகேடான காதல் ஒரு பெண்ணின் உயிரை பறிக்க, மற்றொரு பெண்ணின் வாழ்க்கையும் சேர்ந்து நடுத் தெருவிற்கு வந்து விட்டது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.