Just In




30 அடி நீளம்; 8 அடி அகலம் - உலக கடற்பசு தினத்தில் மணற்சிற்பத்தை செதுக்கிய புதுப்பட்டினம் மீனவர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் உலக கடற்பசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில் கடற்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் உலக கடற்பசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில் கடற்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் 9 பேருக்கு 27 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மனோராவை மையமாக கொண்டு கடற்பசு பாதுகாப்பு மண்டலம்
மனோராவை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மீனவர்கள் வலையில் சிக்கும் கடற்பசுவை உயிருடன் மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகிறது.
கடற்பசு உருவ மணல் சிற்பம் உருவாக்கம்
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் சுமார் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடற்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழுவினர் சுமார் 1.30 மணி நேரத்தில் தத்ரூபமாக உருவாக்கினர். தொடர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடற்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
பின்னர் வெளிவயல் கிராமத்தில் ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் 9 பேருக்கு வனத்துறை சார்பில் 27 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓம்கார் பவுண்டேஷன் அமைப்பு இயக்குநர் பாலாஜி வரவேற்றார்.
அரிய கடல்வாழ் பாலூட்டி உயிரினம் கடற் பசு
விழாவில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி பேசுகையில், " தஞ்சை மாவட்டம் மனோராவை தலைமை இடமாகக் கொண்டு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு, தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைக்க உள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அருகி வரும் ஒரு அரிய கடல்வாழ் பாலூட்டி உயிரினமாக கடற் பசு உள்ளது. அவற்றின் வாழ்விடமான கடல் தாழைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடற்பசு. நடப்பாண்டில் மற்றும் 3 கடற்பசு மற்றும் 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு மீனவர்களால் கடலில் விடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வனத்துறை சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல கணக்கு அலுவலர் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியாளர் சுவேதா, உதவி ஆராய்ச்சியாளர் அஜித்குமார், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓம்கார் பவுண்டேஷன் மேலாளர் அன்பு நன்றி கூறினார்.