தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், நேற்று பகல் முழுவதும் வானம் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தன. இந்த நிலையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர், குடவாசல், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் அதிகாலை சிறிது நேரம் மழை விட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 72 மில்லி மீட்டரும் முத்துப்பேட்டையில் 58.2 மில்லி மீட்டரும் திருத்துறைப்பூண்டியில் 42.8 மில்லி மீட்டரும் திருவாரூரில் 24.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.



 

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் அறுவடை செய்த விவசாயிகள் தங்களது நெல்மணிகள் ஈரப்பதம் அதிகம் உள்ள காரணத்தினால் நெல்மணிகளை காய வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ள காரணத்தினால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை எழுப்பியுள்ளது.