தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை தற்பொழுது வரை இடைவிடாமல் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாக கன மழை என்பது பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1265 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக உப்பு கார தெருவில் வசித்துவரும் சரசு என்கிற மூதாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதன்கரணமாக மன்னார்குடி வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கண்டார் அந்தப் பகுதியில் உள்ள 25 வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக மாற்று இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிராமங்கள்தோறும் வருவாய் துறையினர் மற்றும் வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் உடனுக்குடன் செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.




 

மேலும் திருவாரூரில் 185.8 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 215.8 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 133.8 மில்லி மீட்டரும், வலங்கைமானில் 122.6 மில்லி மீட்டரும், குடவாசலில் 109.4 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 140.0 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 109.6 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 134.0 மில்லி மீட்டரும், பாண்டவையாற்றில் 114.0 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை 254 வீடுகள் பகுதி சேதம் ஆகவும் முழு சேதமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 211 குடிசை வீடுகள் பகுதி சேதமாகும், 7 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

 

இதேபோன்று 36 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 2 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் என்ற கிராமத்தில் பத்மா என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொழுது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.