தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா உம்பளபாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் வசிப்பவர் கமலா (58). இவருடைய மகன் ராஜேஷ் (34) கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திக் சரண், முகேஷ், ஸ்ரீவத்சவ் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். 


இவர்களில் கார்த்திக் சரண் மாற்றுத்திறனாளி ஆவார். தனது சம்பளத்தை வீட்டின் செலவுக்கு கொடுக்காமல் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி சரண்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்படி சில நாள்களுக்கு முன்பும் தகராறு உருவானதாக தெரிகிறது.


இதனால் மனமுடைந்த சரண்யா தன் குழந்தைகளையும் விட்டுவிட்டு தாயார் வீட்டிற்கு செல்வதாக சொல்லி வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். சரண்யா மீண்டும் வீட்டிற்கு வராததால், ராஜேஷின் தாய் கமலா சரண்யாவின் ஊரான மெலட்டூர், கரம்பைக்கு சென்றார். அங்கு சென்றுபார்த்தபோது சரண்யா தாய் வீட்டிற்கும் செல்லவில்லை என்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.




இதனைத் தொடர்ந்து மாமியார் கமலா சர்ணயா பற்றி தனது உறவினர்களிடமும்,  பல பகுதிகளிலும் தீவிரமாக விசாரித்தார். இருப்பினும் சரண்யாவை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கபிஸ்தலம் துணை ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை தேடிவருகிறார்.


இதற்கிடையே தாய், தந்தை இருந்தும் மூன்று குழந்தைகளும் தனது பாட்டி கமலாவுடன் தனியாக வசித்துவருகின்றனர். எனவே மூன்று பேரின் தாயான சரண்யாவை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்று குடும்பத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேருக்கும் தமிழ்நாடு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




சம்பவம் குறித்து கமலா கூறுகையில்,  “எனது மகன் ராஜேஷ் கொத்தனார் வேலைக்கு செல்கிறார். அவர் தினந்தோறும் குடித்துவிட்டு, மனைவி சரண்யாவிடம் தகராறு செய்துவந்தார். 


இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், சரண்யா வீட்டை விட்டு, தாய் வீட்டிற்கு செல்கிறேன் என்று என்னிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தற்போது மாற்றுத்திறனாளி உள்பட மூன்று குழந்தைகளை காப்பாற்ற தினந்தோறும் வயதான காலத்திலும் கூலி வேலைக்கு செல்கிறேன். 


கூலியை பெற்றுக்கொண்டு வந்து, அவர்களுக்கு வேண்டியதை செய்துதருகின்றேன். இருந்தாலும் ராஜேஷ் இப்போதும் குடித்துவிட்டு வருகிறார். சில சமயம் வீட்டுக்கும் வருவதில்லை. சம்பாதித்த பணத்தையும் கொடுப்பதில்லை. ராஜேஷின் குடி நோயால் எனது பேரக்குழந்தைகளுடன் வேதனையில் வாழ்ந்துவருகிறேன்.  முடியாத காலத்தில் என்னால் மாற்றுத்திறனாளி குழந்தை உள்பட மூன்று குழந்தைகளையும் பராமரிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.


எனவே, காவல் துறையினர் சரண்யாவை தேடி கண்டுப்பிடித்து தரவேண்டும். எனது பேரக்குழந்தைகள் மிகவும் வறுமையில் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண