தஞ்சாவூர்: முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தஞ்சையிலிருந்து செல்லும் மாணவ, மாணவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


2022 - 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் 31.01.2023 முதல் 25.02.2023 வரை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவு, மாணவிகள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.


மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா கடந்த 19.06.2023 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோழன் கலையரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் வீரர் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இத்தேர்வில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் வரும் 25.07.2023 வரை நடைபெறவுள்ளது.




இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்ள உள்ளனர். முதலாவதாக வரும் 04.07.2023 வரை பள்ளி மாணவ, மாணவிகள் கபாடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கிலிருந்து அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அப்பேருந்தை துவக்கி வைத்தார். மேலும், அவர்களுடன் போட்டிக்கு அழைத்துச் செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் உடனிருந்தனர். பயணம் நன்றாக அமையவும், மாணவ, மாணவிகள் வெற்றிகள் பெறவும் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.


12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை நடந்தது.


15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் சென்னையில் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.