நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கீழ்வேளூர் - கச்சனம் சாலை சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக தொடங்கிட கோரியும் , 100 நாள் வேலையை செல் போனில் பதிவு செய்வதை தடுத்திட கோரியும், நியாய விலை கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை உண்பதற்கு உகந்த அரிசியாக வழங்க வேண்டும் என்றும், வண்டு மொய்த்து, துர்நாற்றம் வீசும் அரிசி மூட்டைகளை அனைத்து நியாய விலை கடையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா  தலைமையில் சாலை மறியலில் நடைபெற்றது. அப்போது ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட தரமற்ற அரிசியை கொட்டி சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

 



 

இதையடுத்து அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜ கோபால், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எந்த கடையில் தரமற்ற ரேஷன் அரிசி உள்ளது என அதிகாரிகள் வினா எழுப்பினர். அதற்கு பெண்கள், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் இதே நிலைதான் உள்ளது எனக்கூறி வண்டுகள் மொய்த்து, துர்நாற்றம் வீசும் அரிசியை எடுத்து காண்பித்தனர். மேலும் இந்த அரிசியை நீங்கள் சமைத்து சாப்பிடுவீர்களா? எனவும்  அதிரடியாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

 



 

இதில் அதிர்ந்து போன சிவில் சப்ளை அதிகாரிகள், வீணான அனைத்து அரிசிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை போனில்  பதிவு செய்வதை நிறுத்த  அரசிடம் தெரிவிப்பதாக பேச்சுவார்த்தையில்  அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு 1 நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாதர் சங்கத்தை சேர்ந்த 185 பெண்களை கீழ்வேளூர் துறையினர் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுபாதேவி ஒன்றிய தலைவர் வளர்மதி மற்றும் நூற்றுக்கணக்கான மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர் .