பாரதியார் தலைமறைவு வாழ்க்கை நடத்திய கிராமத்தில் அவரது 101 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 


மகாகவி பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், மகாகவி பாரதியாரின் நினைவு நாளை “மகாகவி நாள்”–ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி எதிர்வரும் 11.09.2022 அன்று காலை 9.30 மணியளவில், அமைச்சர்கள், சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாகவி பாரதியார் 1882-ல் திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார்.சில காலம் காசியில் வசித்து வந்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையில் பணியாற்றினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.




மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். அண்ணாவால், “மக்கள் கவி” என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும் தனது புரட்சி கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் நாட்டு  சுதந்திர உணர்வை ஊட்டி போராட செய்தவருமான  மகாகவி  சுப்ரமணிய பாரதியாரின் 101 வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 




அதன் அடிப்படையில் பாரதியார் சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களின் அடக்குமுறை காரணமாக  சில காலம் மன்னார்குடி அருகே உள்ள மேல நாகை கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். மேலும் தனது பிரதான அடையாளமான முண்டாசு மற்றும் மீசையை எடுத்துவிட்டு மாறுவேடத்தில் இந்த கிராமத்தில் தங்கியிருந்துள்ளார். அவர் மேல நாகையில் தங்கி இருந்த காலத்தில் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" எனும் பாடலையும் இயற்றியுள்ளார். இந்த கிராமத்தில் பாரதியார் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலத்தில் அவர் தங்கி தியானம் செய்த மண்டபம் ஒன்று இங்கு உள்ளது. ஆகவே சுப்ரமணிய பாரதியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதியாரின் 101 வது நினைவு தினத்தையொட்டி இந்த மண்டபத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், மன்னார்குடி தமிழ் சங்கம்,அரிமா சங்கம் என பொது நல அமைப்புகளைச் சேர்ந்த  ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சிறுவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியும் பாரதியாரின் நினைவை அவர்கள் போற்றினர்.