தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவேற்றம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.


2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக இத்திட்டம் குறித்து நீண்ட நாள்களாக ஆலோசனையில் இருந்தது. 


இதையடுத்து, இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி அன்று செயல்படுத்தப்படும் என 2023-24 பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டத்தின் செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். 


ஆண்டு வருமானம், நில உரிமை போன்ற பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பம் அளிக்க சிறப்பு முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு முகாம்களை ரேசன் கடைகள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வீடு தேடி வந்து விண்ணப்பங்கள் வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்களுக்கு, கார் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. மேலும், அரசு அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பிகள் உள்ளிட்டோருக்கும் இது வழங்கப்படாது. ஒரு ரேசன் அட்டையில் 'தகுதி வாய்ந்த' பல குடும்ப தலைவிகள் இருந்தாலும், அதில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். 


குடும்ப தலைவராக ஒரு ஆண் இருந்தால், அவரின் மனைவிக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, திருமணமாகாத இல்லதரசிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இது பயனளிக்கும். எனவே ரேசன் அட்டை உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவேற்ற முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அனைத்து வட்டங்களிலும் முதல் கட்ட விண்ணப்பப் பதிவேற்ற முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை 850 நியாய விலைக்கடைகளில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 506 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவேற்ற முகாம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை 333 நியாய விலைக் கடைகளிலுள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்களுக்கும் நடைபெறவுள்ளன.


இந்நிலையில், தஞ்சாவூர் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, தெற்கு வீதி, செங்கிப்பட்டி அருகே டி. பி. சானிட்டோரியம், அயோத்திப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற விண்ணப்பப் பதிவேற்ற பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.