மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளைப்பள்ளம் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த வெள்ளை பள்ளம் கிராமம் உப்பனாறு இடது கரையில் அமைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், காவல் நிலையம் மற்றும் கல்லூரி ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும் என்றால் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை கடந்துதான் செல்லவேண்டும். அந்த பாலமானது அதாவது மேலே மக்கள் பயன்படுத்தும் வகையிலும், ஆற்றின் கீழே வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு நீர் பாசம் பெறும் அமைக்கப்பட்டுள்ளது.




இந்த பாலம் பழுதடைந்ததால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இரும்பு கேடர் அமைத்து பாலத்தின் வழியாகவே வெள்ளம்பள்ளம் கிராம மக்கள் புதுத்துறை ஊராட்சிக்கு மற்றும் புதுத்துறை வழியாக திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்த ஆற்று பாலம் தற்போது முழுவதும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், அவசர தேவைக்கு கடந்து செல்லும் போது தவறி ஆற்றில்  விழும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர் ஆபத்தான முறையில் பாலத்தைக் கடந்த செல்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இந்த பாலம் இல்லாவிட்டால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு புதுத்துறை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது என்றும் இதனால் இந்தப் பகுதியில் புதிதாக பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




 


அதோடு வெள்ளம் பள்ளம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் குளிப்பதற்கும் தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த கிராமத்திற்கு தண்ணீர் வருவதால் இப்பகுதி மக்கள் அந்த தண்ணீரைப் பிடித்து தாங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு பிறகுதான் குளிப்பதாகவும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாததால் மாடுகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு மேய்ச்சலுக்கு சென்று விடுவதாகவும், அந்த கிராம மக்கள் கால்நடைகளை கட்டி வைத்துவிட்டு கால்நடைகளை விடுவிக்க அபராத தொகை கேட்பதாகவும் வெள்ளம்பள்ளம் கிராம மக்கள் வருந்தினர்.




கிராமத்திற்கு திருவாலி ஏரியிலிருந்து வரும் பிரதான நீர்க்குமிழி குமிழிக்கு தண்ணீர் வரும் பாதையும் தற்போது புதுத்துறை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கதவணையினால் தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் வெள்ளை பள்ளத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர் . ஆகையால் அத்திப்பட்டி போல் தனித்துவிடப்பட்ட வெள்ளைப்பள்ளம் கிராமத்திற்கு குடிநீர் வசதி அன்றாடம் கிடைக்கவும், குளத்தை தூர்வாரவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அந்த கிராமத்தை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். அதனை அடுத்து முதற்கட்டமாக பழுதடைந்த பாலத்தை தற்காலிகமாக சீர் அமைக்க முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புதியதாக  6.83 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் விரைவில் அமையவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும், இப்பகுதி தண்ணீர் பஞ்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர், கிராமத்தின் சாலை, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்து சென்றார்.