திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி பாசன பகுதி வறண்டு போய் கிடக்கிறது. விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். சம்பா சாகுபடியை துவக்க முடியாமலும் பரிதவித்து வருகிறார்கள். உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்களையோ , உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட அவசர ஆலோசனை கூட்டங்களை கூட நடத்துவதற்கு முதலமைச்சர் முன்வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இன்றைய நிலையில் மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரை வைத்து குறுவையை தொடரவோ, சம்பா சாகுபடியை  துவக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு உயர் பதவியில் வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை பெரும்பான்மை வகிப்பதால் தமிழக மக்களின் உண்மை நிலையை அனுபவபூர்வமாக அறிந்து செயல்படுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு சில மாற்றங்களை செய்து உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய அடிப்படையில்  காவிரி ஆறு அதற்கு உட்பட்ட அணைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆறுகள் அணைகளில் வரும் நீர் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனை பின்பற்றி காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அலுவலகம் பெங்களூரில் அமைக்கப்பட்டு அதன் மூலம் அன்றாடம் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பையும், வரத்தையும் கணக்கில் கொண்டு தமிழ்நாட்டின் தேவை அடிப்படையில் பாசன நீர் பகிர்ந்து அளிக்க வேண்டிய பொறுப்பு ஆணையத்துக்கு மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.  




இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உண்மைக்கு புறம்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் கருத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு சார்பில் அலுவல் சாரத சட்டத்திலும் நீர் பாசனத்திலும், புலமைப் பெற்ற ஒருவரை தலைவராக நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். இக்குழுவில், மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறைசெயலாளர் நிரந்தர உறுப்பினராகவும், வேளாண்மை ஆய்வாளர்,வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் புலமை மிகுந்த தலா ஒருவர் என 2 உறுப்பினர்களை மத்திய அரசு பரிந்துரைக்கலாம் அதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து ஆணையத்தை அமைக்கும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி பார்வையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்திற்கு நீர் பங்கீடு ஆலோசனை சொல்வதற்கும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அன்றாடம் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்காகவும் ஆணையம் எடுக்கும் முடிவை செயல்படுத்தும் நீர் பங்கீட்டு அதிகாரம் கொண்ட அமைப்பாக காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைத்திட வேண்டும். அக்குழுவில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர் பாசனத்துறை முதன்மை பொறியாளர்கள் நிரந்தர உறுப்பினர்களாக கொண்டு அமைத்திட உத்தரவிட்டது.




ஆண்டொன்றுக்கு 177 டி எம் சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், பற்றாக்குறை காலத்தில் எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆணையம் எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசிடம் ஆணையம் உதவி கோரும் பட்சத்தில் உரியமுறையில் உதவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களும் ஆணைய உத்தரவை மதிக்க வேண்டும். காரணம்  பிரதமருக்கோ, நீர் பாசனத்துறை அமைச்சருக்கோ கடிதம் எழுதி அவர்கள் மூலம் ஆணையத்தை வலியுறுத்த சொல்வது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பொருந்தாத ஒன்று நடைமுறைக்கு ஏற்கத்தக்கது அல்ல. எனவே அரசியல் கொள்கைகள் புறந்தள்ளி விட்டு காவிரி உரிமை என்பது சட்டரீதியாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக காவிரி பிரச்சனையில் அரசியலைப் புறந்தள்ளி வைத்து விட்டு தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இதற்கு முன் மாநிலங்களுக்கு இடையே 6க்கும் மேற்பட்ட ஆணையங்கள் நேரடியாக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளதுகாவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமேமத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் அமைக்கப்பட்டிருக்கிற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன் 


எனவே இருக்கும் அதிகாரத்தை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமே தவிர, ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று திசை திருப்பி அரசியலாக்கவும். மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி காவிரி பிரச்சனையை கொண்டு செல்லமுயற்சிக்கக் கூடாது. எனவே ஆணையம் தண்ணீரை பெற்றுக் கொடுப்பதற்கு அவசர கால கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம். தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து மத்திய அமைச்சரை சந்திப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதுமாக 2மாதம் காலம் கடத்திவிட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் அழிந்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக விவசாயிகள்  மட்டுமல்ல தமிழ்நாட்டின் அரிசி பற்றாக்குறை ஏற்பட போகிறது அடுத்த ஆண்டு அண்டை நாடுகளிலும், மாநிலங்களிலும் கையேந்தக்கூடிய நிலை ஏற்படபபோகிறது என எச்சரிக்கிறேன். சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மிகப்பெரும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பேராபத்து ஏற்பட உள்ளது. சட்டரீதியாக தண்ணீரை பெறுவதற்கு அவசரகால வழக்குகளை பதிவு செய்வதற்கு மாற்றாக பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலமாக பிரச்சனையை திசை திருப்ப முயற்சிப்பதையும்,அரசியலாக்க முயல்வதையும் காவிரி டெல்டா விவசாயிகள் ஏற்க மாட்டோம்.தமிழ்நாடு அரசு வழக்கு தொடரும் என்று எதிர்பார்த்து வந்தோம் அதனை மறுத்து எங்களை அழிப்பதற்கு துணை போனதால் நாங்களே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.