ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக அறுசுவை உணவை நாட்டுப்புற இசை கலைஞர்கள் வழங்கி வருகின்றனர். உயிர் உள்ள வரை உணவளித்திட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருடைய மனைவி நதியா. இவர்கள் நாட்டுப்புற இசை கலைஞர்கள். இவர்கள் இருவரும் வள்ளலார் மீது கொண்ட பற்றால் ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். அவர்களுடைய வருமானத்தில் பாதியை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டு வருகின்றனர். 

 

காலை 8 மணிக்கு உணவு சமைக்கும் பணியை தொடங்கி மதியம் 11 மணிக்கு நிறைவு செய்கின்றனர். பல்வேறு இடங்களில் ஏழை, எளியோருக்கு உணவு அளித்த வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பு பொதுமக்களுக்கும், புறநோயாளிகளுக்கும் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கும், இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். 

இதில் சாம்பார், ரசம், மோர், கூட்டு பொரியல் சேர்த்து அறுசுவை உணவினை வழங்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 300 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் உணவு வழங்குவதற்கு முன்பாகவே உணவு வழங்கும் இடத்தில் ஏராளமான வரிசையில் நின்று உணவு பெற்றுச் செல்கின்றனர்.

 

இது குறித்து இலவசமாக உணவு வழங்கிவரும் குமார் கூறுகையில், பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே மிகப்பெரிய தொண்டு என வள்ளலார் கூறியுள்ளார். அந்த வழியில் ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக உணவு அளித்து வருகிறோம். மேலும் இந்த பணியில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. எங்கள் உயிர் இருக்கும் வரை நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்து கொண்டே இருக்க வேண்டும் என்பததான் நோக்கம் ஆசை எல்லாம். கடந்த 20 ஆண்டுகளாக உணவு அளித்தும் வரும் நிலையில் கொரோனா நேரத்தில் உணவு வழங்குவது மனதிற்கு முழு நிறைவை தருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக எந்த நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தபடாததால் தாங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து உணவு வழங்கி வந்தோம். ஆனால் எங்கள் பணியினை பார்த்து பலரும் உதவி வழங்கி வருவதால் தொய்வு இன்றி மக்களுக்கு உணவு அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.



இவர்களிடம் உணவு பெற்றுச் செல்லும் நபர்கள் கூறுகையில், “எங்கள் ஏழ்மையின் நிலை கருதி தான் நாங்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறோம். இங்கு அருகில் உள்ள உணவகங்களில் மதிய உணவு மட்டும் 100 ரூபாய் இருந்தால் மட்டுமே வாங்க முடியும், இந்தச் சூழலில் தினமும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு, இவர்கள் அறுசுவை உணவை தினமும் வழங்கி வருகிறார்கள். உணவு மிகவும் சுவையாக உள்ளது, அதிக காசு கொடுத்து வாங்கினால் கூட இவ்வளவு சுவை இருக்காது. தினமும் உணவு வழங்கி வரும் இந்த தம்பதியினருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என உணவு பெற்று செல்லும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.