தஞ்சாவூர்: திருச்சி, தஞ்சாவூரில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 26, 27ம் தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிறார் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.



தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், ஆம்னி பேருந்து நிலையத்தை இன்று பார்வையிட்ட பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி காலை வருகிறார். திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மறுநாள்  27ம் தேதி காலை திருச்சியில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்கமம் என்கிற கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ. 140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார். மேலும் வல்லம் குவாரி சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் சூட்டவுள்ளார்.





பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறும் அனைத்து மாவட்டங்களில் 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. சில இடங்களில் சட்டரீதியான பிரச்னைகள் வந்துவிட்டதால் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அவற்றையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு இன்று காலை வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
அப்போது மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ். ஸ்ரீகாந்த், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் க.  சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் மாநாடு அரங்கம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை திறந்து வைக்கவே முதல்வர் ஸ்டாலின் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.