கடல் காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் நாகை மீனவர்கள் கரை திரும்பினர். ரூ.5 லட்சம் செலவு செய்து சென்ற மீனவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என கவலை தெரிவித்தனர்.

 

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் நேற்று அதிகாலை நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் கரை திரும்பியது. மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே  ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் போதுமான மீன்கள் கிடைத்த நிலையில் பெரும்பாலான படகுகளில் நஷ்டத்தோடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.

 

கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் தற்போது வரை அமலில் உள்ளதாலும் ஆந்திர உள்ளிட்ட கடல் பகுதியில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசுவதால் கடலுக்குச் சென்ற நாகை மீனவர்களுக்கு போதிய மீன் கிடைக்காமல் கரை திரும்பியுள்ளனர். ஒவ்வொரு விசைப்படகுக்கும் டீசல், ஐஸ், உணவுப் பொருட்கள் உட்பட 3 லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அவர்களுக்கு சூறைக்காற்று காரணமாக கரை திரும்ப நேர்ந்ததால் போதிய மீன் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கும் மீனவர்கள் 2 லட்சத்திற்கு மேல் இம்முறை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ள வியாபாரிகள் மீன் விலையை பொருட்படுத்தாமலும் வாங்கிச் சென்றனர். மேலும் உள்ளூர் மீன் பிரியர்கள் விலை ஏற்றம் காரணமாக அவர்களது அருகாமையில் உள்ள மீன் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என  தெரிவித்துள்ளனர்.

 

மீன்களின் விலை நிலவரம் (கிலோ)

 

இறால் 300 முதல் 650 வரை

கனவா 490

நண்டு 450

வஞ்சிரம் 500 முதல்1300 வரை

வாவல் 900 முதல்1450 வரை

சங்கரா 250

சீலா 450

கிழங்கான் 350

நெத்திலி 100 

பாறை 360 முதல் 450 வரை

கடல் விரால் 650

பால் சுறா 600