மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27 ம் தேதி நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் இறங்கி வயலை சேதப்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜை ஒரு சிலர் தாக்க முயன்றனர்.




இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று 38 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அன்றைய தினமே இந்த கைது சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 




இந்நிலையில், பருத்திக்குடி கிராமத்தில் 7 விவசாயிகள் இன்று தங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.  இந்த சூழலில் கடந்த 27 ம் தேதி நேரடி நெல்விதைப்பு செய்தபோது சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாலும், போராட்டக்காரர்களும் விவசாயிகளும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இருதரப்பினர் இடையே கோயில் கும்பாபிஷேக விழாவில் தகராறு ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி கூலி உயர்வு பிரச்சினையும் இருந்து வருகிறது. இதனால்  மேலும் பிரச்சினை ஏற்படாதவாறு காவல்துறையினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகாவிற்கு அறிக்கை அளித்து தடையாணை உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர். 




காவல்துறை அறிக்கையின் பேரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3) ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 (3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு நேரடி நெல் விதிப்பு தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தங்கவேல் தலைமையில் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதன்காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண