தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுதர்சன சபா என்ற நாடக மன்றம் உள்ளது. இந்த சபாவில்  நாடகம், கலைநிகழ்ச்சிகள் மற்றும்

  சொற்பொழிவுகள்  நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பழைய பஸ் நிலையம்  அண்ணா சிலை அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன்பகுதியில் கடைகளில்,  ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் செயல்பட்டு  வந்தது. மேலும், இந்த வளாகத்தில் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவையும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த உணவகம் மற்றும் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது.


எனவே இந்த கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த 13.8.2021 அன்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடைகளின் உரிமையாளர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கட்டிடம் தொடர்பாக அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உணவகத்திற்கு அனுமதி பெற்றதற்கான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 22.9.2021 அன்று பூட்டி சீல் வைத்தனர்.




இதனை தொடர்ந்து மதுபானகூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றுக்கு கால அவகாசம் உள்ளதால் அந்த கடைகளில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 ந்தேதி நோட்டீசு ஒட்டப்பட்டது. அதில், சுதர்சன சபா வளாகத்திலுள்ள  பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கட்டிடத்திற்கு 13.8.2021 அன்று நகர் ஊரமைப்பு சட்டம் 1971 ன்படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி கட்டிடத்தை உரிய அறிவிப்பின் கீழ் உரிய அனுமதி பெற்ற விவரம் சமர்ப்பிக்காததால் அல்லது திருத்தி அமைக்காததால் இந்த கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.



 அதன்படி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று  சுதர்சன சபா வளாகத்தில் அமைந்துள்ள பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கடைகளுக்கு கடந்த மாதம் பூட்டி  சீல் வைத்தனர். பின்னர் அக்கடைகளில் பூட்டி முத்திரையிடுதல் உத்தரவை ஒட்டினர்.இதனை தொடர்ந்து சுதர்சன சபா கடந்த காலங்களில் திமுக பிரமுகர் ஆர்.கே.ராமநாதன் என்பவர் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வந்தார். மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் செலுத்தவில்லை, இதனால் அரசுக்கு  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் உத்தரவின்படி, மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ள 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட கட்டிடம் மற்றும் இடத்தை, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975 -ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து  மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், நகராட்சி பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் 1.2.2022 அன்று அதிகாரிகள் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ் சபாவின் கதவருகே ஒட்டினர்.




கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தஞ்சையில் திமுக பிரமுகரிடம் இருந்து மாநகராட்சி மீட்ட ரூ. 100 மதிப்பிலான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட கலெக்டர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் பொக்லீன் இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.




இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே  44ஆயிரம் சதுரஅடி  நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில் பாரம்பரியம்மிக்க சுதர்சன சபா என்கிற நாடக சபை இருந்தது. 100ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் முடிந்து அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை  ஆக்கிரமித்து, அங்கு  மதுபான கடை, பார் உள்ளிட்டவைகள் விதிகளை மீறி நடத்தி வந்தனர்.  மேலும் ஒப்பந்த தொகை 20 கோடி மாநகராட்சி செலுத்தவில்லை. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் கடந்த 15 நாட்கள் முன்பே இடத்தை  நீதிமன்ற உத்தரவுபடி கைப்பற்றினர்.  இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த  கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 100 கோடி என கூறப்படுகிறது என தெரிவித்தார்.