கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு : தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின்படி, கீழ்காணும் உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement

அபராதம்

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.
அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்குக் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.


தொடர் கண்காணிப்பு 

மேற்சொன்ன நெறிமுறைகள் அனைத்து இடங்களிலும் (நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்கள், பொதுக் குழாய் இருக்கும் இடம், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
கோவிட் தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.

காய்ச்சல் முகாம்கள்

கூட்டாக நோய்த்தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
நோய்த்தொற்று உள்ள இடங்களில் நோய்த்தொற்றைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்யவேண்டும்.

முகக்கவாசம் கட்டாயம்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கடந்த ஆண்டைப் போல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கலாச்சார, வழிபாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்குப் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும். அதனைச் சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்திட வேண்டும். தேர்தல் பணியின் முக்கிய பங்காக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

பரிசோதனை

பொதுமக்களைப் பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும்.
ஏதாவது நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola