திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வானில் திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தத்திற்கு பிறகு நில அதிர்வு ஏற்பட்டதுபோல உணர்ந்ததாக பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், அது தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து சென்ற பயிற்சி சூப்பர் சோனிக் விமானத்தின் சத்தம் எனத் தெரிய வந்துள்ளது.


சமீபத்தில், தஞ்சை விமானப்படை தளத்தில் சூப்பர் சோனிக் விமானம் சேர்க்கப்பட்டது. இது ஒலியைவிட வேகமாக செல்லும் ஆற்றல் கொண்டது. இதனால், இந்த வகை விமானம் வானில் பறக்கும்போது இடியோசை போன்ற ஒருவகையான சத்தத்தை ஏற்படுத்தும். இதனை சோனிக்பூம் என்பார்கள்.


இந்த விமானம் திருவாரூரில் பறந்ததே சத்தத்திற்கு காரணம் எனவும், இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.