தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு ஒதுக்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. 68 சாதிகளை கொண்ட சீர்மரபினர் பிரிவுக்கு 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.





தமிழக அரசின் இந்த மசோதாவிற்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.


இந்த நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதுதான். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு, குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர் இடஒதுக்கீடு கூடுவதற்கும் அல்லது குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார். துணை முதல்வரின் இந்த கருத்து வன்னிய அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.