தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.  அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.




இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்றுள்ளார். அவரின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றுள்ளது. அப்போது, தாராபுரம் அருகே உள்ள குப்பணங்கோவில் டோல்கேட் அருகே திடீரென பாதுகாப்பு வாகனங்களும் மோதிக்கொண்டன. இதில், அமைச்சரின் பாதுகாப்பிற்கு சென்ற 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.


இதையடுத்து, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகியது அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.