ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக். இவரது மனைவி வனிதா (32). கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.


அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை பிளேடால் அறுத்து  உண்டியலில் போட முயற்சி செய்துள்ளார். ஆனால் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் வனிதாவை  பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


இதுகுறித்து வனிதாவின் தாயார் குருவம்மாள், "எங்கள் குடும்பம் ஆரம்பத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறோம். எனது மகள் திமுக வெற்றி பெற்றால் நாக்கை அறுத்து வேண்டுதல் செய்ய உள்ளேன் என விளையாட்டுத்தனமாக கூறி வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்றதையொட்டி உண்மையிலேயே நாக்கை அறுத்துள்ளார்" என கூறினார்.