தமிழ்நாட்டில் முக்கியமாக தென்மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது அச்சத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இந்த படுகொலைகள் பழிக்குப் பழியாக, திட்டம் போட்டு நடந்துள்ளது என்ற செய்திகள்தான் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியதாக உள்ளது. குறிப்பாக, ஆண்களை திட்டம்போட்டு வெட்டி கொலை செய்வது செய்தியாக வந்த நிலையில், இந்த வாரம் மட்டும் இரண்டும் பெண்கள் கொடூரமான முறையில் வெட்டிகொல்லப்பட்டது எல்லாம் சமீபகாலங்களில் காணாத ஒன்றாகதான் உள்ளது. அதுவும் 10 நாட்களில் நான்கு பேரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் எல்லாம் தெரிந்துகொள்ளும்போது இது தமிழ்நாடா என்றே கேட்கத் தோன்றுகிறது.




கடந்த 10 நாட்களில் நடந்த கொலைகள்:


வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் நடுரோட்டில் வெட்டிக் கொலை: தி.மு.க. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரின் பேரன் வெட்டிக் கொலை; சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த  காட்டுராஜா மற்றும் அவரது மனைவி காசியம்மாள் எரித்துக் கொலை; நாகப்பட்டினம் மாவட்டம் இருக்கை கிராமத்தைச் சேர்ந்த முபாரக் கழுத்தை அறுத்துக் கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா கடத்திக் கொலை; திருநெல்வேலி மாவட்டம், கீழச்செல்லை சேர்ந்த சங்கரசுப்ரமணியன் தலை துண்டித்து கொலை; திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன் என்பவர் வெட்டிக் கொலை, ராணிப்பேட்டை மாவட்டம், தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கட்டையால் தாக்கி கொலை; விழுப்புரம் மாவட்டம், 'காரணை' கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் முத்துபாண்டி வெட்டிக் கொலை; திருவண்ணாமலை மாவட்டம், வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன் வெட்டிக் கொலை; கிருஷ்ணகிரி மாவட்டம், சிலேப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடப்பன் அரிவாளால் வெட்டிக் கொலை; கடலூர் மாவட்டம், குப்பங்குளத்தைச் சேர்ந்த காந்திமதி வெட்டிக் கொலை; கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டுவை சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்; தேவக் கோட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் கதிரவன் வெட்டிக் கொலை என எண்ணற்ற கொலைகள் வரிசையில், நேற்று திண்டுக்கல், இ.பி. காலனியைச் சேர்ந்த நிர்மலா பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.




இத்தனை கொலைகள் நடந்துள்ளது மனவேதனையை அளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


தென்தமிழ்நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் பெரும்பாலும், சாதி வெறி, மதுபோதையால் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் கொலைகள் நடக்கின்றன. ஆனால், கொலை செய்யப்பட்டவரின் தலையை வெட்டி, அந்த தலையை  சாதித் தலைவர்களின் நினைவிடங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் கல்லறைகள் மற்றும் வீட்டு வாசல்கள் முன்பு வைக்கும் காட்சிகள் தென் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கிறது.




“1995ஆம் ஆண்டு தென் தமிழ்நாட்டில் சாதியை மையமாகக் கொண்ட கொலைகள் நடந்தபோது, ​​40 மணி நேரம் மாலை நேரங்களில் பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.  அப்போது, போலீசை​​ஹீரோக்களைப் போல வழிநடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அதிகாரிகள் எங்களிடம் இருந்தனர். சமீபத்தில், கோபமான கூட்டத்தை எதிர்கொள்ளும்போது, ​​முன்னால் நின்ற ஒரு மூத்த அதிகாரி நடுங்கினார். "அவரது கைகள் நடுங்கின”  போலீஸ் அதிகாரி  ஒருவர் கூறினார். 


கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றபோது, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தென்மாவட்டங்களில் கூலிப்படை கொலைகள் அதிகரிக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியிருந்தார்.


திமுக  ஆட்சிக்கு வந்தால் ரவுடியிஸம், கொலை, கொள்ளைகள் அதிகம் நடக்கும் அப்போது பேசப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மற்ற துறைகளில் எல்லால் சிறப்பாக செயல்படுவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பொதுமக்கள் பயமின்றி இருக்க சட்டம் - ஒழுங்கு தீவிரமாக இயங்க வேண்டும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சட்டம் - ஒழுங்கை முதலமைச்சர் மேலும் தனி கவனம் செலுத்தி, தொடர் படுகொலைகளும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள் ஆகும்.


‛போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை... அச்சுறுத்தும் சட்டம் ஒழுங்கு’ -ஓபிஎஸ் அறிக்கை!