தமிழ்த்தேசியம் என்பது உலகத்தில் இல்லாத ஓர் அதிசயம் அன்று! எல்லாத் தேசிய இனங்களுக்கும் உள்ள இலக்கண வரம்பு அடிப்படையிலேயே தமிழ்த்தேசியமும்  இருக்கிறது. என்ன சிக்கல் என்றால், தமிழ்த் தேசியத்தை மறைத்தும் மறுத்தும் இங்கு போலி தேசியங்கள் இரண்டு செல்வாக்குப் பெற்றுள்ளன.




ஒன்று இந்திய தேசியம்; இன்னொன்று திராவிட தேசியம்!


இந்தியா பல தேசிய இனங்களையும் பல தேசியங்களையும் கொண்ட ஒரு நாடு. இப்படிப்பட்ட நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியப் பீரங்கிகள் உருவாக்கின. இந்த உண்மையை உணர்ந்து இருந்ததால்தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள்– அதன் முதல் உறுப்பிலேயே (Article - 1) “இந்தியா அதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம் (India, that is Bharath shell be a Union of States) என்றார்கள். இந்தியாவைத் தேசம் என்று கூறாமல் அரசுகளின் ஒன்றியம் என்றார்கள்.


“தேசியம்” என்பது மனிதர்கள் உருவாக்கிக்கொள்ளும் வடிவம் அன்று. இயற்கை உருவாக்கும் வடிவம்! மொழி, இனம், தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு; மனிதர்கள் நினைத்து உருவாக்கிக் கொள்வதில்லை. அடுத்த இனத்தையும் அதன் தாயகத்தையும் ஆக்கிரமிக்கும் வலிமை பெற்ற முரடர்கள் மற்ற தேசிய இனங்களின் தாயகங்களை ஆக்கிரமித்துக் காலனியாக்கி ஆண்டார்கள்.


அவ்வாறு பல தேசிய இனங்களின் தாயகங்களை ஆங்கிலேயர் ஆக்கிரமித்து இந்தியாவை உருவாக்கி, அதைத் தங்கள் காலனியாக்கி இருநூறு ஆண்டுகள் ஆண்டார்கள்.




இந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய காங்கிரசும் அதற்குத் தலைமை தாங்கிய காந்தி அடிகளும், இந்தியா என்பது, ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட புதிய வடிவம், இதற்குள் பல தேசிய இனங்களும், தேசங்களும் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தனர். அதனால், ஆங்கிலேய ஆட்சி தனது நிர்வாக வசதிக்காகப் பிரித்திருந்த  மாநிலங்களை மாற்றி, மொழித் தேசிய இன வடிவிலான மாநிலங்களாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று கோரினர். அதற்கு முன்னோடியாக, இந்தியாவில் காங்கிரசு மாநிலக் கமிட்டிகளை மொழி மற்றும் தேசிய இனத் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும் என்று 1920-இல் அனைத்திந்தியக் காங்கிரசுக் கமிட்டி முடிவு செய்தது.


வெள்ளையர் ஆட்சியில் அப்போதிருந்த சென்னை மாகாணத்தில் இன்றையத் தமிழ்நாடும், இன்றைய ஆந்திரப் பிரதேசமும் இணைந்திருந்தன. அதைக் காங்கிரசுக் கட்சி 1920-களின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி என்றும் ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டி என்றும் இரண்டு மாநிலக் கமிட்டிகளாகப் பிரித்தது. மற்ற மாகாணங்களையும் மொழி-இன அடிப்படையில் தனித்தனி மாநிலக் கமிட்டிகளாகக் காங்கிரசுக் கட்சி அப்போதே பிரித்தது.


காந்தியடிகள் 1944-இல் ஆங்கில நாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவிற்கு என்ன சுதந்திரம் கோருகிறோமோ அதே சுதந்திரம் மாநிலங்களுக்கும் வழங்கப்படும். மாநிலங்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் சுதந்திரம் இந்தியாவில் வழங்கப்படும். அதே வேளை இம்மாநிலங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் சுதந்திரம் இருக்காது” என்றார்.


ஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின் ஐந்து மாதங்களில், காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவருக்குப் பின் நேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்கள், மொழி வழித் தேசிய மாநிலங்கள் உருவாக்குவதை எதிர்த்தார்கள். வெள்ளையர், வெவ்வேறு மொழி இனங்களை இணைத்து வைத்திருந்த அதே நிர்வாக மாநிலங்கள் தொடரும் என்று அன்றையத் தலைமை அமைச்சர் நேரு அறிவித்தார்.




இந்திய அரசின், மொழிவழித் தேசிய இன எதிர்ப்பு நிலைபாட்டை எதிர்த்து அங்கங்கே கண்டனக் குரல்கள் எழுந்தன. விசாலாந்திராத் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கர்கள் போராட்டம் தொடங்கினர்.


ஆந்திரத்தைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீ ராமுலு அவர்கள் தனி ஆந்திரம் கோரி 1952 அக்டோபர் 19-இல்  அன்று சென்னையில் உண்ணாப் போராட்டம் தொடங்கினார். காங்கிரசு ஆட்சி கண்டு கொள்ளவில்லை. 1952 டிச.15-இல்  58-வது நாளில் பொட்டி ஸ்ரீராமுலு உயிர் துறந்தார். இந்திய அரசுக்கு எதிராக ஆந்திரத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. நேரு ஆட்சி பணிந்தது. 1953-இல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு, தெலுங்கர்களுக்கான மொழிவழித் தேசிய மாநிலமாக உருவாக்கப்பட்டது.




தென் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஏற்கெனவே மலையாள மன்னர்கள் ஆக்கிரமித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைத்திருந்தனர். அப்பகுதித் தமிழர்கள் பெரும் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரினர். பட்டம் தாணுப் பிள்ளை என்ற மலையாள முதலமைச்சர் காவல் துறையை ஏவி, 11 தமிழர்களை சுட்டுக் கொன்றார். பலரைச் சிறையில் அடைத்தார்.


பல தியாகங்களுக்கு பின், இப்பொழுதுள்ள கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டை நகரமும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.


அதே போல், ஆந்திரத்துடன் தமிழ் நாட்டுப் பகுதிகளை நேரு ஆட்சி இணைத்து வைத்திருந்தது. அதை எதிர்த்தும் தமிழ்நாட்டோடு தங்கள் தாயகப் பகுதிகளை இணைக்க வலியுறுத்தியும் வடக்கெல்லைப் மீட்புப் போராட்டம் தமிழர்கள் நடத்தினர். காவல் துறை அடக்குமுறையில் இருவர் உயிர் நீத்தனர். திருத்தணி வரை உள்ள பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. பல பகுதிகள் இன்னும் கேரளத்துடன் உள்ளன. தமிழர் தாயகப் பகுதிகள் பல ஆந்திரத்துடன் விட்டு வைக்கப்பட்டன.





1950-களில் பல பகுதிகளில் மொழி-இனவழித் தாயக மாநிலம் அமைக்க வலியுறுத்தி மக்கள் போராடினர். முதலில் மறுத்த நேரு, பின்னர் போராட்ட வலிமையின் காரணமாக ஒப்புக் கொண்டு மொழி வழி மாநிலங்கள் உருவாக்கினார். அவ்வாறு மும்பை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டதே குஜராத் மாநிலம்! இப்படி இன்னும் பல! பஞ்சாப் மாநிலம் புதுதில்லி,  அரியானா, இமாச்சலப்பிரதேசம் எனப் பிரிக்கப்பட்டன.


இவை சொல்லும் செய்தி என்ன? இந்தியா என்பது ஒற்றைத் தேசிய இனத்தின் ஒற்றைத் தேசம் அன்று. பல தேசிய இனங்களின் -  தேசியத் தாயகங்களின் தொகுப்பு இந்தியா! “இந்தியன்” என்று ஒரு தேசிய இனம் இருப்பதாக – இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடிமக்கள் (Citizen)  பற்றி மட்டுமே இந்தியக் குடிஉரிமைப் பிரிவுகள் அரசமைபுச் சட்டத்தில் கூறுகின்றன. ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் அரசு தொடர்பான விண்ணப்பங்களில் தேசிய இனம் – Nationality – எது என்று கேட்கப்படுகின்றது. அதற்கு “இந்தியன்” என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இங்கு இந்தியக் குடிமகன்கள் (Citizen of India) மட்டுமே இருக்கிறார்கள்.




ஆந்திரத்தில் என்.டி.ராமராவ் “தெலுங்குதேசம்” என்று கட்சி தொடங்கினார். இந்தியத்தேசம் என்பதற்கு இது முரண்தானே! இந்தியா ஒரு நாடு (Country); ஆனால் இந்தியா ஒரு தேசம் (Nation) அன்று!


மொழிவழித் தேசிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று 1950களில் எழுந்த போராட்டங்களில், தெலுங்கர்கள் விசாலாந்திரா கேட்டார்கள்; கன்னடர்கள் சம்யுக்த கர்நாடகம் கேட்டார்கள்; மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில், தி.க.வும் திமுகவும் திராவிடம் கேட்டனர். தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகியோர் இணைந்த திராவிட நாடு கேட்டார்கள்! ம.பொ.சி. போன்றவர்கள் தான் “புதிய தமிழகம்” கேட்டார்கள்! தமிழ், தமிழர்களின் மொழி - இன அடையாளங்களை மறைப்பதில் செயற்கை கட்டமைப்புகளான இந்திய தேசியமும் திராவிடமும் போட்டி போடுகின்றன.


தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் “எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசியத் தாயகம் தமிழ்நாடு என்கிறோம். இந்தியாவை இறையாண்மையுள்ள தேசிய இனத் தாயகங்களின் கூட்டமைப்பாக மாற்றுங்கள் என்கிறோம். காந்தியடிகள் கூறிய மாநில இறையாண்மையைத்தான் – தேசிய இன இறையாண்மையாகக் கோருகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டம் – இத்தியாவை ஒரு தேசமாகக் கூறாததைத்தான் நாங்கள் கூறுகிறோம்.




ஆனால் இந்திய அரசு மேலும் மேலும் மாநில உரிமைகளைப் பறித்து, அனைத்து அதிகாரங்களையும் புது தில்லியில் குவித்துக் கொண்டுள்ளது. தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளின் உரிமைகளை அவற்றின் தாயகத்திலேயே அழித்து, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கல்வியிலும் நிர்வாகத்திலும் திணிக்கிறது.


“ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே பாண்பாடு, ஒரே மதம்” என்ற நிலையை நோக்கி வேகமாச் செல்கிறது இந்திய அரசு!


தேசியம், தேசம் (Nationalism, Nation) என்ற சொற்கள் எப்போதும் ஓர் இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு சார்ந்து தான் சொல்லப்படும். தமிழ்த்தேசியம் என்று சொல்லும் போது, தமிழர், தமிழ், தமிழ்ப்பண்பாடு சார்ந்துதான் சொல்கிறோம். இந்திய ஆட்சியாளர்கள் இந்தியத் தேசியம், ஒரே தேசம், ஒரே பண்பாடு என்று சொல்லும் போது, வேத கால ஆரியப் பண்பாடு, சமஸ்கிருதம், இந்தி முதலியவற்றைக் கருவாக வைத்துத்தான் சொல்கிறார்கள். இந்துத்துவா என்று சொல்வது ஆரியத்துவா தான்!


2019ல் ஜம்மு-காஷ்மீரை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக இந்திய ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். தமிழ் நாட்டை மூன்று ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றி மூன்றுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டி விடுவார்களோ என்ற அச்சம் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது.







இந்தச் சூழ்நிலையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு என்று பரிபாடலிலும், தமிழகம் என்று புறநானூறு, அகநானூறு நூல்களிலும், பின்னர் தமிழ்நாடு என்று சிலப்பதிகாரம் தொடங்கி பல்வேறு இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டத் தமிழ்நாட்டையும்  தமிழர்களையும், பாதுகாத்திடவும், தமிழ்நாட்டிற்குரிய இறையாண்மையைப் பெறவும் உறுதிமிக்க – வெகுமக்கள் தளம் கொண்ட தமிழ்தேசிய அமைப்பு தேவை! அத்தேவையை நிறைவு செய்யும் நோக்கில் தமிழ்தேசியப் பேரியக்கத்தை வளர்த்து வருகிறோம். தமிழர்களின் தாயகம், மொழி, பண்பாடு, பொருளியல் மேம்பாடு, இறையாண்மை மீட்பு முதலிய இலட்சியங்களுக்கான பேரியக்கமாகத் தமிழ்த்தேசியத்தை வளர்த்திடப் பாடுபட்டு வருகிறோம். இந்த இயக்கம் காலத்தின் கட்டாயம்.


- பெ.மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பேரியக்கம்