விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி தர்மராஜா திரெளபதியம்மன் கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காத தொடர்பாக இருதரப்பினரிடையேயான விளக்கத்தை எழுத்துபூர்வமாக வருவாய் கோட்டாட்சியர் விசாரனை நடத்தி பெற்று கொண்டார்.


பட்டியலின மக்கள் மீது தாக்குதல்:


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழாவின் போது பட்டியல் வகுப்பினர் சாமி கும்பிட கோயிலுக்குள் சென்றதால் ஒரு தரப்பினர் பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.


இந்நிலையில் பட்டியலின மக்களை திரெளபதி அம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு சமூக மக்களிடையேயும் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக இருந்து வந்ததால் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.


மோதல் ஏற்படும் அபாயம்:


மற்றொருபுறம் தங்களை கோயிலுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.


இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சனைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலானோர்  திரெளபதி அம்மன் கோயில் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் திரெளபதி அம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (09-06-23) நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என இரு சமூகங்களைச் சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் கடந்த 7ஆம் தேதி சம்மன் வழங்கப்பட்டிருந்தது.


அரசு எடுக்கும் முடிவுக்கு சம்மதம்:


அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள 80 பேரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 38 பேரும் என மொத்தம் 62 பேர், விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி எழுத்து பூர்வமாக ஒப்புதல் கொடுத்தனர். இதில் பட்டியலின மக்கள் கோவில் உள்ளே அனுமதிப்பது தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவதாகவும், அரசு இந்த விவகாரத்தில் கோவிலினுள் அதிமதிக்கவில்லை என்றால் ஊரை விட்டு வெளியேறுவோம் என  தெரிவித்துள்ளனர்.


மற்றொரு தரப்பினர் கோவில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால் உயர் நீதிமன்றத்திற்கு அவரது மகன் சந்தானம் சென்றுள்ளதாகவும் அது தனிநபருக்கு சொந்தமான கோவில் என்றும் குலதெய்வ வழிப்பாட்டு கோவில் என்பதால் இது நீதி மன்ற உத்தரவுப்படி அரசு கூறும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.