கரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி சண்முக சுந்தரம் உத்தரவிட்டார்.


 






கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். 


 


 





இதே போல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.


 


 




இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 19 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 21-ஆம் தேதி வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம்  25ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 3 வது முறையாக  ஒத்தி வைத்த நிலையில் நேற்று ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முக சுந்தரம்  உத்தரவிட்டார்.


 


 




முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைச் சார்ந்த வழக்கறிஞர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. இருந்த போதும் தற்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.