கேப்டன் விஜயகாந்த் 


தமிழ் நாட்டில் விஜயகாந்த் என்ற பெயரைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கேட்டபோது மக்கள் கூறியது, ’நல்ல மனசு, தைரியமான மனுசன், தப்ப தட்டி கேப்பாரு, எங்க தலைவரு, எம்பட உசுரு, கருப்பு எம்.ஜி.ஆர், எனது அபிமான நடிகர், கேப்டன், புரட்சிக் கலைஞர், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், தேமுதிக தலைவர், மாண்புமிகு முன்னாள் எதிர்கட்சித் தலைவர் என தங்களது மனதில் தோன்றியதை கூறினர். ஆனால் இவர்கள் கூறியது எல்லாம் விஜயகாந்த் என்ற கிரீடத்தில், அன்பு கொண்டவர்கள் அழகு பார்க்க கொண்டு சேர்த்த முத்துக்கள். ஆனால் விஜயகாந்த் விஜயகாந்த்தாக மாறுவதற்கு முன்னர் அவரது பெயர் விஜயராஜ். 




பூர்வீகம்


மதுரை மண்ணின் மைந்தன் விஜயராஜ் பிறந்தது 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி. இவரது குடும்பம் ரைஸ் மில் நடத்தி வந்ததால் சிறுவயதில் நல்ல வசதியாகவே வளர்ந்தார். பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட விஜயராஜுக்கு 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க ஆர்வம் இல்லாததால் அவரது குடும்பம் அவரை மேற்கொண்டு கட்டாயப்படுத்தவில்லை. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த இவருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் மட்டும் தொற்றிக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் படங்களை அனுதினமும் பார்ப்பது, படத்தின் காட்சிகள் குறித்து தனது நட்பு வட்டம், உறவினர் வட்டம் என அனைவரது மத்தியிலும் உரையாடுவது என அன்றைய கால சினிமா குறித்தான உரையாடலில்தான் இவரது பொழுதுகள் கழிந்தது.


குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தினை சுமார் 70 முறை பார்த்துள்ளாராம். எம்.ஜி.ஆர் படத்தில் இருந்த சமூக கருத்துகள் விஜயராஜ் மனதில் ஆழமாகவே பதிந்தது. இதனால் ஊரில் நடக்கும் பிரச்னைகளை தீர்க்கவேண்டும் எனவே களப்பணிகள் செய்துவந்தார் விஜயராஜ். இதனால் மதுரை திருமங்கலம் பகுதியில் எந்த பிரச்னை என்றாலும் மக்கள் விஜயராஜை அணுகியதால், அவரது தந்தைக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ரைஸ் மில் நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை, ஊர் பிரச்னைகளைத் தீர்க்க தனது மகன் செல்லக்கூடாது, யாரும் அவரை நோக்கி வரக்கூடாது எனவும்  ரைஸ் மில்லின் ஒட்டுமொத்த பொறுப்பையும் மகன் தலையில் கட்டிவிட்டனர் விஜயராஜின் பெற்றோர் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதி. ஆனால் விஜயராஜின் நிர்வாகத்திறமையைப் பார்த்த பெற்றோர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தான் காத்திருந்தது. ரைஸ் மில்லை பார்த்துக் கொண்டாலும் சினிமா ஆசை அவரை விடவில்லை. இதனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார்.  




கசப்பு நிறைந்த சினிமா தொடக்கம்:


எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்து ஆளான விஜயராஜ் சினிமாவிற்குள் நுழைந்த போது கோடம்பாக்கம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. வசதியாக வளர்ந்த விஜயராஜ், 20 முதல் 30 பேருக்கு வேலை கொடுத்த வந்த விஜயராஜ் சென்னையில் உள்ள அனைத்து சினிமா கம்பெனிகளிலும் தனக்கான வாய்ப்பினை தேடிவந்தார். ஆனால் எளிதில் அவருக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. வாய்ய்பு அளிப்பதாக உறுதி அளித்தவர்களும் இறுதி நேரத்தில் ‘உனக்கு பேசவே தெரியல, கருப்பா இருக்க’ போன்ற காரணங்களைக் கூறி நிராகரித்தனர். கதாநாயகனாக வாய்ய்பு தேடிக்கொண்டு இருந்த இவருக்கு, இனிக்கும் இளமை படத்தில் வில்லனாகத்தான் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்த படத்தில்தான் விஜயராஜ் என்ற பெயர் விஜயகாந்த் என மாற்றப்பட்டது. இனிக்கும் இளமை படத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாததால் ராசி இல்லாத நடிகர் என அழைக்கப்பட்டார்.




இதனால் பெரும் மன வருத்தத்திற்கு ஆளான விஜயகாந்திற்கு கிடைத்த கடைசி வாய்ப்புதான் தூரத்து இடி முழக்கம். இந்த படத்தில் மீனவ இளைஞனாக நடித்த விஜயகாந்த்திற்கு மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் சினிமா வட்டாரத்தில் முதல் வெற்றியை தந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக சினிமாவில் அறிமுகமான முதல் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி இடத்தினை பெற்றிருந்தார். இவரை தொடக்க காலத்தில் நிராகரித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் இவருக்குப் பின்னர் அனைவரும் வரிசையில் நின்றனர். இதனால் ராப்பகலாக உழைத்த விஜயகாந்த் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்தார். 




தொடர்ந்து வெற்றிகளுக்குப் பின்னர் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தார். இதனால் விஜயகாந்தின் சினிமா கிராஃப் மீண்டும் சரிந்தது. இந்த காலத்தில் விஜயகாந்த்தின் நண்பர் ராவுத்தர் தனி சினிமா கம்பெனி தொடங்கி விஜயகாந்த்தை வைத்து முதல் படத்தை எடுத்தார். இந்த படம் மீண்டும் விஜயகாந்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஜயகாந்த் கதாநாயகனாக தனக்குத் தரும் மரியாதை, முக்கியத்துவம், உணவு என அந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைக்கவேண்டும் என நினைத்தது மட்டுல் இல்லாமல், அதனை செயல்படுத்தினார் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.  இதுமட்டும் இல்லாமல் ராவுத்தர் ஃபிலிம்ஸ் அலுவகத்தில் சினிமா வாய்ப்பு தேடுபவர்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம் என விஜயகாந்தின் உத்தரவின் பேரில் வாசல் கதவை திறந்தே வைத்திருந்தார் நண்பர் ராவுத்தர். அங்கு தங்குபவர்களுக்கு உணவு தினமும் வழங்கப்பட்டதற்கும் விஜயகாந்த்தான் முக்கிய காரணம். 




ஈழத்தின் மீதான பற்று


இலங்கையில் ஈழப்போர் நடந்தபோது தனது ரசிகர்களுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். இவருக்குப்பின் தான் கமல் உட்பட ஒவ்வொரு நடிகரும் இணைந்து கொண்டனர்.  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது இருந்த நன்மதிப்பினால் தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயரிட்டார். தமிழ்நாட்டில் இலவச மருத்துவமனைகள் கட்டிக்கொடுத்தது முதல் ஏழை எளியவர்களுக்கு உதவுவது வரை மட்டும் இல்லாமல் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு போய் நியாயத்தின் பக்கம் நிற்பது, என விஜயகாந்த் சினிமாவைக் கடந்து பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரை ஏற்படுத்தியதற்கு காரணம் தமிழ்நாடு முழுவதும் இருந்த விஜயகாந்த்தின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ரசிகர்கள்தான். புகழின் உச்சிக்கே சென்ற விஜயகாந்த் மிகவும் எளிமையாகவே காணப்பட்டார். 




அரசியல் பிரவேசம்


1996இல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திரையுலக பொன்விழா நடத்த அன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் ஜகா வாங்க, கேப்டன் பொன்விழாவை நடத்திக் காட்டினார். இதன் பின்னர் 1999இல் கடனில் மூழ்கிவந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று மீட்டார். தமிழ்நாட்டில் இன்றுவரை விஜயகாந்த்தினால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எப்படியும் குறைந்த பட்சம் ஊருக்கு ஒரு குடும்பமாவது இருக்கும். 


2005இல் தான் பிறந்த மதுரை மண்ணில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த்.  அப்போது அவரது முழக்கங்களில் மிகவும் முக்கியமானது “ இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்பது. இப்படி வாழ்ந்தவரும் விஜயகாந்த். அடுத்த சில மாதங்களிலேயே சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தார். முதல் தேர்தலில் 8 சதவீததிற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது மட்டும் இல்லாமல், ஒற்றை தேமுதிகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்குள் நுழைந்தார். அதன் பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தல் தேமுதிகவிற்கு வெற்றி வாய்ப்பினை தரவில்லை என்றாலும், வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவியது. இதனால் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு பெரும் கட்சிகளும் விஜயகாந்த்திற்கு வலை வீசினர். இதில் திரைப்பட நடிகர், பத்திரிகையாளர் சோ தேமுதிகவை அதிமுக பக்கம் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். இறுதிவரை நம்பிக்கையாக இருந்த கலைஞருக்கு பெரும் அதிருப்திதான் மிஞ்சியது. 




மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர்


2011 தேர்தலில் 21 இடங்களை வென்றது மட்டும் இல்லாமல், அதிமுகவை அரியணை ஏறச் செய்ததில் தேமுதிகவின் பங்கு முக்கியமானது. சட்டமன்றத்தில் திமுகவை ஓரம்கட்டி பிரதான எதிர்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.  சட்டமன்றத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை அதன் பின்னர் சரிவை நோக்கித்தான் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது உடல் நிலையும் ஒன்று. அவர் மீண்டும் அதிரடி அரசியலுக்கு வரமாட்டாரா என ஏங்கும் ரசிகர்களும் தொண்டர்களும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ளனர். 




சினிமா வாழ்க்கையைக்கு முன்னாள் இருந்தே மிகவும் பொது வாழ்வில் நாட்டம் கொண்டிருந்த விஜயகாந்த் பின்னாளில் பெரும் அரசியல் தலைவர்களான மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இருவரின் ஆதிக்கமும் ஓங்கி இருந்த காலத்தில் கட்சியைத் தொடங்கி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவே உயர்ந்தார்.  இதனலே இவர் சூறாவளிகளுக்கு மத்தியில் தோன்றிய இடி முழக்கம் அவர். இவரது உடல்நிலை மட்டும் சீராக இருந்திருந்தால் விஜயகாந்தை மாநிலத்தின் முதலமைச்சராகவே அமரவைத்து அழகு பார்த்திருப்போம் எனக் கூறும் அவரை உளமாற நேசிக்கும் ரசிகர்களும் தொண்டர்களும் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கின்றனர். 




இப்படி திரையுலக வாழ்விலும் பொதுவாழ்விலும் கம்பீரமாக வாழ்ந்த விஜகாந்த்க்கு அவரது திடீர் உடல்நலக் குறைவு அவரை நீண்ட காலம் செயல்படவிடாமலே செய்துவிட்டது. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 28ஆம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நக்குறைவாலும் கொரோனா தொற்றினாலும் உயிரிழந்தார்.