தேமுதிக தலைவர் விஜயகாந்த்(Vijayakanth) உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவரது மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். 


தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.ஏற்கனவே உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மீண்டும் போரூரில் உள்ள மியாட் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி, இருமல் போன்றவற்றால் ஏற்பட்ட சுவாச பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து இன்று அதிகாலை தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், வெண்டிலேட்டர் சிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது”. ஆனால் சில மணி நேரத்தில் விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டது. அவரது மறைவு திரைத்துறையினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பலர் நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய பின் தெரிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் வீட்டில் இருந்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் அவரகள் இன்று காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், தமிழக திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் அவர்களின் இறுதி மரியாதை நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக்கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது. மேலும் தேமுதிக கட்சி கொடி 15 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.