விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் உதவி புரியும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

  


இதுகுறித்து தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, நமது மாநில மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள, தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு, தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காணொளிக் கண்காட்சி அமைப்புக் குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


எதிர்பார்ப்பை கிளப்பும் தவெக மாநாடு:


தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் இருவரும் அடங்கிய சிறப்புப் பிரிவு, மாநாட்டில் தலைவரின் பிரத்யேகப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் பாதுகாவல் படையினரை மேற்பார்வை செய்வர். இத்தனியார் பதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.


மேலும் இந்தக் குழுவின் தலைமை நிர்வாகிகள், முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி, தனியார் பாதுகாவல் படையின் உதவியுடன் வழிகாட்டும் குழு. பாதுகாப்புக் குழு, போக்குவரத்துக் குழு, வாகன நிறுத்தக் குழு. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, சீருடை அணிந்த தன்னார்வலர்கள் குழுக்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கான நெறிமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தும் கூடுதல் பணியினையும் ஆற்றுவர்.


கழகத் தலைமை நிலையச் செயலகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி. நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொளிக் காட்சிக்கான (Audio Visuals) தயாரிப்புப் பணிகளையும் மேற்கொள்வர்.


புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:


இத்துடன், மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் சீருடை அணிந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் பணிகளில் அதற்கெனத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் 'தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு' ஈடுபடும்.


காணொளிக் கண்காட்சி (Video Exhibition) அமைப்புக் குழுவானது, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாகப் பரிணாமம் அடைவதற்கு முன்பு. ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாகி, பின்னர் தளபதி மக்கள் இயக்கமாக வளர்ந்து பல்லாண்டுகளாகத் தமிழக மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆற்றிய பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்த காணொளிக் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளைக் கவனிக்கும்.


கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்ட இக்குழுக்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியல் களத்தில் தவெகவின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. மாநாடு தொடர்பாக நாளுக்கு நாள் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், இன்று தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.