விழுப்புரத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


விழுப்புரம் : விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரத்திலுள்ள பழமைவாய்ந்த  ஆஞ்சநேயர் கோவில் ஹைக்கிரீவர் சன்னதியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில்  பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளுடன்  கலந்துகொண்டு கல்வியின் துவக்கமாக ‘அ’ என்ற எழுத்தினை அரிசியில் எழுதி முதல் கல்வியை துவக்கி வைத்தனர். 


‘அ’ என்ற எழுத்தினை அரிசியில் எழுதிய குழந்தைகள்


ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளுக்கு முதல் முறையாக கல்வி தொடங்கும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று விழுப்புரத்தில் பல்வேறு  கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம்  திருவிக வீதியிலுள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் ஹயக்கிரீவர் சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தங்களின் குழந்தையின் கையை பிடித்து நெல் மற்றும் அரிசியில் பெயர் எழுதியும், ‘அ’ எழுத்து எழுதியும் முதல் கல்வியை தொடங்கி வைத்தனர். குழந்தைகள் கல்வியில் நல்ல திறனை பெறவேண்டும் வாழ்க்கையில் மேலும் மேலும் சிறக்க வேண்டும்  என்பதற்காக வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் விஜயதசமியையொட்டி பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். 


வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி


நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை. பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதத்தின், இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும்.


ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள், 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றை பெற்றனர் என்பது, சங்க இலக்கிய பதிவு. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என, இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.


வாழ்நாளில் மிக முக்கியமான நாள்


குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள், அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான், அவர்கள் வாழ்நாள் முழுதும், அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் துணை நிற்கிறது. நவராத்திரியில், முப்பெருந்தேவியரின் பூஜை முடிந்த பின் வரும், 10வது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்தவொரு செயலும், சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை.


'அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, எழுத வைப்பார்கள்'


அந்த தினத்தில், குழந்தைகள் கற்றுக் கொள்ள துவங்கும் கலையில், அவர்கள் ஒன்றிவிடுவர். விஜயதசமியன்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. ‘அக்ஷரபியாசம்’ என்றும் இதை கூறுகின்றனர். கல்வி கற்றுத்தரும் குருவின் பங்கு, இதில் மிக முக்கியம். அறிவை கற்றுத்தரும் குருவை சிறப்பிப்பதாகவும், இந்நிகழ்வு நடக்கிறது. அப்பா, தாத்தா அல்லது தாய் மாமாவின் மடியில், குழந்தைகளை அமர வைத்து கொள்வர். ஒரு தட்டில், அரிசியை முழுவதுமாக பரப்பி வைத்துக் கொள்வர். குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, எழுத வைப்பார்.