தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் ஆயுதபூஜை. சரஸ்வதி பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கம் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் விஜய் வாழ்த்து


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இதுவரை த.வெ.க.வின் கொள்கை என்னவென்று இதுவரை கூறவில்லை.


விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலே அவர் தனது கொள்கையை மக்கள் மத்தியில் கூற உள்ளார். தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் என பல கொள்கைகள் தமிழ்நாட்டின் அரசியலில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் விஜய் எதை சார்ந்து இயங்கப் போகிறார்? என்பது பெரும் கேள்விக்குறியாக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.


சிலர் விமர்சனம்


இந்தநிலையில், நடிகர் விஜய் கடந்த மாதம் வந்த விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வாழ்த்து கூறவில்லை. இது பேசுபொருளாக மாறியது. பெரியாரின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று பெரியாரின் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்திய விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை என்று கூறி சிலர் விமர்சித்தனர்.


இந்த சூழலில், விஜய் பொதுமக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியிருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


பனையூரில் நடந்த ஆயுத பூஜை


இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின், தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பக்தி பரவசத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுவாமி படங்களுக்கு, நிவார்தனை செய்து, பொரிகடலை மற்றும் சுண்டல் ஆகியவற்றை வைத்து படையல் போட்டுள்ளார். தொடர்ந்து விஜய்  கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்த கொடி கம்பத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


குழப்பமான மனநிலையில் விஜய் ?


நடிகர் விஜய் குழப்பமான மனநிலையில் இருப்பதாக இதன் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் தந்தை பெரியார் பிறந்தநாளன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்ததை வைத்து, விஜய் பெரியார் வழியில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.‌ அதன்பிறகு அவரது கட்சி லேட்டர் பேடில் விஜய் குங்கும பொட்டு வைத்ததுபோல் இருந்த புகைப்படம் அகற்றப்பட்டு, வெறும் நெற்றியோடு இருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தபோது விஜய்க்கு எதிர்ப்பும், ஒரு தரப்பில் ஆதரவும் எழுந்தது. இந்தநிலையில் மாநாட்டிற்கு பந்தல்கால் நடும் விழா நடந்தபோது பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்தநிலையில், ஆயுத பூஜை கொண்டாட்டம் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நடந்திருப்பது, விஜய் குழப்பமான மனநிலையில் இருக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளதாக அரசியல்  விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.