தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ  ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரவேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 


வேதாந்தா நிறுவனம் தனது மனுவில், " நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளுக்கான  சிகிச்சையில்  ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானது. முதல் பாதிப்பு  அலையை ஒப்பிடும்போது கொரோனா இரண்டாவது அலையில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை அதிகமாக உள்ளது. ஸ்டெர்லைட்டில் உள்ள இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1000 டன் ஆக்ஸிஜன் தயாரிக்கமுடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு ஆக்சிஜனை இலவசமாக  வழங்க அனுமதி வேண்டும்" என்று தெரிவித்தனர். 



 


 


தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு என்ன?  


கொரோனா இரண்டாவது அலையில்  மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு  ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த  மாநிலங்களில் ஆக்ஸிஜன் நுகர்வு மிக அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


நாட்டில் ஆக்ஸிஜனின் தினசரி  உற்பத்தி 7127 மெட்ரிக் டன்னாக உள்ளது. கடந்த 12ம் தேதி அன்று, நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜனின் நுகர்வு 3842 மெட்ரிக் டன். இது தினசரி மொத்த உற்பத்தியில், 54 சதவீதமாக  உள்ளது. 


 



    


தமிழகத்தில் தினசரிகொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ( Active Load Case ) 79,804 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 28,005 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் அதிகபட்சம் 10 சதவீதம் பேருக்காவது (அதாவது, 8000) ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது.   


தமிழகத்தில் தினசரி ஆக்ஸிஜன் உற்பத்தி 249  மெட்ரிக் டன்னாக உள்ளது. INOX sriperumbudur மற்றும் Lynde Chennai ஆகிய இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். INOX sriperumbudur தினசரி 149 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனையும், Lynde Chennai நிறுவனம் தினசரி 100  மெட்ரிக் டன் ஆக்ஸிஜனையும் உற்பத்தி செய்கின்றன.  இதைத் தாண்டி, தமிழகத்தில் உள்ள  எஃகு ஆலைகளில் உள்ள கூடுதல் ஆக்ஸிஜன் இருப்புகளை, மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்குவது குறித்தும் அரசு யோசித்து வருகிறது.    


தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் முறையே தினசரி 298,275, 60 மெட்ரிக் டன் ஆக்ஸ்ஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த மாநிலங்களில்  கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படாமல் உள்ளது.   


வட  மாநிலங்களைப் பொறுத்த வரை ஆக்ஸிஜன் தேவைப்படும் மாநிலங்கள், ஆக்ஸிஜன் கிடைக்கும் இடங்கள் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் டோல்வியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ  எஃகு ஆலை, சட்டீஸ்கர் பிலாய் பகுதிகளில் உள்ள செயில் நிறுவன எஃகு ஆலை, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஜேஎஸ் டபிள்யூ  எஃகு ஆலை ஆகியவைகளிலிருந்து தினசரி மருத்துவ ஆக்ஸிஜனை பெற்று வருகிறது. இதேபோல், மத்தியப் பிரதேசமும், சட்டீஸ்கரில் உள்ள  பிலாய் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை பெற்று வருகிறது. 



 


வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் சாலை போக்குவரத்தின் மூலம் மருத்துவ ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கான  கிரையோஜெனிக் டேங்கர்கள் இந்தியாவில் இல்லை. இதன் காரணமாக, ஒரு மாநில உற்பத்தியாளரிடம் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள நோயாளிக்கு கொண்டு செல்லும் பயண நேரம்  அதிகரித்து காணப்படுகிறது. இதனால், புறநகர் பகுதிகள் மற்றும்  கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வது கடினமாக அமைகிறது.                


ஸ்டெர்லைட் ஆலை : தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையில்  உள்ள இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1000 டன் வழங்க முன்வதுள்ளது வரவேற்கத் தக்கதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்கு நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரிக்கக் கூடும் என்று கணக்கிடப்படுகிறது. ஆக்சிஜன் நுகர்வும் அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  தூத்துக்குடி ஆலைக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்யப்படும்.      


தூத்துக்குடி வழக்கு:   


முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னையர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது.