உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 


தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை:


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், "உத்தரகாண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர் என்பது குறித்து தகவல் பெறப்பட்ட உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.


அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு. மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு. தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.


நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்பு:


தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.9.2024) காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.


யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.


மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிருநாட்கள் தங்கி, பின்னர் புதுதில்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


சமீபத்தில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதில், 25 தமிழர்கள் சிக்கி மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு மொட்டையடித்து அவமரியாதை: அரசுகள் வேடிக்கை பார்ப்பதா? எழும் கண்டனம்