ஒரே காலத்தில் இரு தேர்வுகள் நடைபெற உள்ளதால், மாநில பல்கலைக்கழகத்தின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
’’இந்திய வானிலை ஆய்வுத் துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 - 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன!
அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை. தேர்வுகளும் நடப்பதால், எதாவது ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது!
2017-ஆம் ஆண்டில் 1,165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால்தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்!
அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்தி வைக்க தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஆணையிட வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை, தேர்வுசெய்யும் முறை இதுதான் - https://tamil.abplive.com/news/chennai/sports-development-authority-of-tamilnadu-goverment-special-scholarship-cheme-for-sportspersons-87591/amp