இன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக, இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.






திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இதர தென்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசான மழையும் பெய்யக்கூடும்.






தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களுக்கும்  'ரெட் அலர்ட்'(Red Alert) எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று காலை விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் 25-ந் தேதி குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், 26-ந் தேதி தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண