தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


தமிழ்நாட்டில் ஐப்பசி என்றாலே  அடைமழை தான் என்ற கூற்றுக்கு ஏற்ப கடந்த அக்டோபர் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழலே நிலவுவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பனிக்காலமும் தொடங்கிவிட்டதால் இரவில் இயல்பை விட சற்று அதிகமாகவே குளிரும் உள்ளது. 






இன்றைய வானிலை நிலவரம்


இதனிடையே  தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் 22 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னையில் நிலவரம் 


தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும்,  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


இன்று (நவம்பர் 20) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேலே தெரிவிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.




மேலும் படிக்க: World Cup 2023: "தோனியை மிஸ் பண்றோம்.. இதை ஏத்துக்கவே முடியல” .. இந்திய அணி தோல்வி குறித்து ரசிகர்கள் புலம்பல்..!