சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. 


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (நவம்பர் 22) காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய இலேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விட்டு விட்டு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை உடனடியாக வெளியேற்றும் பணியும் மாநகராட்சி சார்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.