கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.

 

மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபம்:


 

இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.






இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 26-ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் இலட்ச தீப வழிபாடு நடைபெறவுள்ளது. கார்த்திகை உற்சவ கொடியேற்றம் இன்று சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் நிகழ்ச்சியின்போது பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.  கொடியேற்ற நிகழ்வையொட்டி கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க தீபாராதனை அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.




 

லட்ச தீபம்:


இதனைத்தொடர்ந்து கொடிமரத்தில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை  தொடர்ந்து இன்று முதல் 30- ம் தேதி முடிய 10 நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறவுள்ளது. கார்த்திகை விழாவை முன்னிட்டு 10 நாட்களும்  மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை  இரண்டு வேளைகளிலும் ஆடி வீதிகளில் புறப்பாடாகுவர்.

 

வரும் 26ஆம் தேதியன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும். இதனை தொடர்ந்து அன்றைய தினமே இரவு 7 மணியளவில்  மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளவுள்ளனர். இந்த 2 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படவுள்ளது.



 

கார்த்திகை உற்சவம் தொடங்கிய நிலையில்  உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கிரீடம் ஆகிய விஷேசங்கள் எதுவும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.