TN Railway Projects: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement


தமிழ்நாட்டில் ரயில்வே:


ரயில் சேவை என்பது இந்தியாவின் போக்குவரத்து சேவை பிரிவின் நரம்பை போன்று பின்னி பிணைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இது இன்றியமையாததாக உள்ளது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். குறைந்த விலையில் நெடுந்தூரம் பயணிக்க முடியும் என்பதால், அடித்தட்டு மக்கள் ரயில் சேவையை அதிகம் சார்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை சுமார் 5 ஆயிரத்து 952 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு, ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளை சேர்ந்த மக்களும் தங்கள் பகுதிக்கு ரயில்சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வவத்த வண்ணம் உள்ளனர். அதையேற்று பல புதிய திட்டங்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து முன்னெடுத்து வருகின்றன.



தமிழக அரசு மீது குற்றச்சாட்டு:


இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக, அதிமுக மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை குற்றம்சாட்டினார். சில திட்டங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அதற்கான நில கையகப்படுத்தலை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.


நிலம் கையகப்படுத்தும் பணிகள்:


தமிழ்நாட்டில் மத்திய  அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக்டேர் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள்:


தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான,



  • திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை (100%)

  • மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%)

  • மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%)

  • கன்னியாகுமரி நாகர்கோவில் அகல ரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%)

  • தூத்துக்குடி மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%)

  • சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%)

  • கொருக்குப்பேட்டை எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%)

  • மயிலாடுதுறை திருவாரூர் அகல ரயில்பாதை (100%)

  • பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%)

  • புதிய அகல இரயில் பாதை (சேவம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%)

  • மண்ணார்குடி நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%)

  • சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%)

  • விழுப்புரம் திண்டுக்கல் அகல ரயில்பாதை (100%)


ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தையும் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம், முழு நிலமும் கையகப்படுத்தப்பட்ட திட்டங்களில் ரயில்வே துறையின் பணிகள் தொடங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.


ரயில்வே துறையால் நிலுவையிலுள்ள பணிகள்


தமிழக அரசின் அறிவிப்பின்படி,



  • திருவண்ணாமலை திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011 ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

  • அத்திப்பட்டு புத்தூர் இடையிலான ரயில்வே தடத்திற்கு இதுவரை ரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (LP.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை

  • தூத்துக்குடி-மதுரை (வழி அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 702.30 ஹெக்டேர் நிலங்களுக்கு நிர்வாக அனுமதி கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை மேலும் நில ஆர்ஜித இடங்களை கலைத்திட ரயில்வே துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஈரோடு மாவட்டத்தில் கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க 12.38 ஹெக்டேர் நிலத்திற்கு நிர்வாக அனுமதி கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் ரயில்வே துறையினரால் தற்போது கைவிடப்பட்டது.

  • மொரப்பூர் தர்மபுரி புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 78.55 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் 8.25 ஹெக்டேர் நில எடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம் & ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்நிலங்களுக்கு இழப்பிடுதொகை வழங்க நிறுத்தம் செய்யவும் மாற்று வழித்தடம் அமைத்திடவும் பரிசீலனையில் உள்ளதாகவும் ரயில்வே துறையினரால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் ரயில்வே துறையினரால் தொழில் நுட்ப முடிவிற்கேற்ப நில ஆர்ஜிதம் செய்யப்படும். மேலும், 46.30 ஹெக்டேர் மீதமுள்ள நிலங்களுக்கு நில எடுப்பு பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • மன்னார்குடி பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ. ரயில் பாதை திட்டம் மற்றும் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ இரயில் பாதை திட்டம் ஆகிய இவ்விரண்டு திட்டங்களுக்கும் தற்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசின் நிர்வாக அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்தால் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் கோரிக்கை


ரயில்பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில் மேற்படித் திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து விரிந்து திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், தங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.