சேலத்தில் நடைப்பெற்ற மாநாடு திமுகவுக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்தும் இடத்திற்கும் பயணித்தோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், “ சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியக் கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.



 மேலும், அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால்  சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒருவித எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுகிறார்கள், அந்த எதிர்மறை எண்ணங்களை திமுக இளைஞரணி மாநாடு நேர்மறையாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார். 


மேலும், இது தொடர்பான அறிக்கையில், “ நீட் ஒழிப்பு என்பது கழகத்தின் உரிமை முழக்கமாக மாறியுள்ள சூழலில், களத்திலும் இணையத்திலும் நீட் விலக்கு, நம் இலக்கு என 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றிருந்தோம். அவற்றில் அஞ்சல் அட்டைகளில் நாம் பெற்ற கையெழுத்துகளை மாநாட்டு மேடையில் நம் தலைவரின் கரங்களில் ஒப்படைத்தோம். அவை, இந்திய குடியரசுத்தலைவர் அவர்களிடம் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று உழைத்த கழக நிர்வாகிகள் இளைஞர் அணி தகவல் தொழில்நுட்ப அணி - மாணவரணி - மருத்துவ அணி உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும், பேரலையாக திரண்டு வந்து கையெழுத்திட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் என் அன்பும், நன்றியும்.


நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு. நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.


எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது. இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் "மாநில உரிமை மீட்பு".


அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும், இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது. 


மத அரசியலா - மனித அரசியலா? மனு நீதியா - சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கைபார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த நேரத்தில் மாநாட்டில், தலைவரின் உரையிலிருந்து 
நான் அடிக்கோடிட்டு காட்ட விரும்பும் கருத்துக்களை கூற விரும்புகிறேன். நாடும் நமதே, நாற்பதும் நமதே.  இந்தியாக் கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்பது இந்தியாவின் முழக்கமாகும்.


நரேந்திர மோடி 2 முறை பிரதமராகி இருக்கிறார். அந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை. இப்போது 3-ஆவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்கப் போவதில்லை. இந்த வார்த்தைகள் மூலம், நமக்கு வழிகாட்டுதலையும் உற்சாகத்தையும் நமது கழகத் தலைவர் - முதலமைச்சர் தந்துள்ளார்கள்.


முக்கியமாக கழகத்தலைவர் கூறிய இன்னொரு கருத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.  இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். இங்கே உதயநிதி மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய மகன் தான். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு தான். என்று சொன்னார்களே, அதுதான் என்னை பொருத்தவரை நமது மாநாட்டு வெற்றியின் அளவீடு.


லட்சம் இளைஞர்களின் சக்தியை நமது தலைவர் பெற்றுவிட்டார்கள். அவரின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். தேர்தல் களத்தில் உழைப்போம்! மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி -அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்ப்போம்!” என கூறியுள்ளார்.